சு.கவிற்கு அநீதி ஏற்படாத வகையில் புதிய தீர்மானம் - ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காதவகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

நாடுமுழுவதும் உள்ள பெண் உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மகளிர் முன்னணியை வலுவூட்டுவதும் அதன் பங்களிப்பை கட்சிக்காக தொடர்ச்சியாக பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.   மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்தார்.  

நாட்டு மக்கள் மற்றும் தாய்மாரின் கட்சியாக கருதப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின்போது பெண் பிரதிநிதிகளுக்கு விசேட கடமைகள் வழங்கப்படுவதுடன், நிகழ்கால சமூக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நல்லதோர் சமூகத்தினையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமையென்றும் தெரிவித்தார்.   இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கருத்து தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, ஆரியவதி கலபதி ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட செயற்பாட்டாளர்களும் கட்சியின் மகளிர் அமைப்பின் பிரதான செயலாளர் சந்திரிகா டி சொய்சா, பிரதி தலைவர் சுமித்ரா பிரியங்கனி அபேவீர மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெண் உறுப்பினர்கள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Thu, 06/20/2019 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை