வடக்கில் பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல அபிவிருத்தித்திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டார்.
கொழும்பிலிருந்து நேற்று (01) மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ் கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகொப்டரில் யாழ் கோட்டையில் வந்து இறங்கினார்
அவர்களை கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வரவேற்றிருந்தனர்.
யாழில் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு யாழ் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக் கொடுப்பனவுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைக்க உள்ளார்.
அதே போன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஹெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக பயனாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.
பிரதமரின் யாழ் விஐயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமர் தங்கியுள்ள இடம் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களிலும் அதேபோல அவர் பயணிக்கும் இடங்களிலும் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பருத்தித்துறை விசேட நிருபர் - நிதர்சன் வினோத்)
from tkn