கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய பயிலுனர்கள் அனுமதி

நாடளாவிய ரீதியில் 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இவ்வருடம் சுமார்  8,000க்குமதிகமான ஆசிரிய டிப்ளோமாப் பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் சுமார் 27டிப்ளோமாக் கற்கைநெறிகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் மூன்றாம் வாரம் ஆரம்பமாகவுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு மாத்திரம் மொத்தம் 350பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார். கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக் கல்வி, இஸ்லாம், விஷேட கல்வி ஆகிய 05பாடநெறிகளுக்கு டிப்ளோமாதாரிகள் அனுமதிக்கப்படவுள்ளனர். 2016மற்றும் 2017ம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய, இரு கல்வியாண்டு பயிலுனர்கள் ஒரே தடவையில் அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் மேலும் தெரிவித்தார்.

கணிதம் மற்றும் இஸ்லாம் பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தும் பொறுப்பு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இம்மாதம் 17,18,19ம் திகதிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் நேர்முகப் பரீட்சை நடைபெறும். நேர்முகப் பரீட்சார்த்திகளுக்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி நவாஸ் சுட்டிக்காட்டினார். தேசிய கல்விக் கல்லூரிகளுக்குத் தெரிவு செய்யப்படும் பயிலுனர்கள் இருவருட உள்ளகப் பயிற்சியைக் கல்லூரியிலும், ஒரு வருட கற்பித்தல் பயிற்சியைப் பாடசாலையிலும் பெற்றுக் கொள்கின்றனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Sun, 06/09/2019 - 13:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை