"டுடே சம்திங் கொய்ங் டு ஹப்பன்" தவறு செய்யாமல் தவறை எவ்வாறு ஏற்பது?

குண்டுத் தாக்குதலை தடுக்க முடியாமல் போனதற்கு பாதுகாப்பு பலவீனமே காரணம்

பொலிஸ் மா அதிபர் சாட்சியம்

மகேஸ்வரன் பிரசாத், லோரன்ஸ் செல்வநாயகம்

பாதுகாப்புத் துறையின் முறைமையில் காணப்படும் பலவீனமே ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை தடுக்க முடியாமல்போனது என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும்போதே அவர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.

ஜயம்பதி விக்ரமரட்ன கேள்வி : உங்களுக்கு நேரடியாக அறிக்கையிடும் பிரிவுகள் உள்ளனவா?

பதில் : குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் போன்றவர்கள் எனக்கு நேரடியாக அறிக்கையிடுவார்கள்.

ஜயம்பதி விக்ரமரட்ன கேள்வி : தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உங்களுக்கு நேரடியாக அறிக்கையிடுவாரா?

பதில் : இல்லை. ஆரம்பத்தில் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. அரசாங்க புலனாய்வு சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவு பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இருந்தாலும் பொலிஸ்மா அதிபருக்குப் பொறுப்புக் கூறுவதில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பொறுப்புக் கூறும் வகையிலேயே நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. நிர்வாக செயற்பாடுகள் பொலிஸின் கீழ் வந்தாலும் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுகின்றன.

சரத் பொன்சேகா கேள்வி: அப்படியாயின் அவர்கள் யாருக்குப் பொறுப்புக் கூறுவார்கள்?

பதில் : பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பொறுப்புக் கூறுவார். அவர்கள் பொலிஸ் அதிகாரிகளாக இருந்தாலும் செயற்பாட்டு ரீதியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளனர்.

சரத் பொன்சேகா கேள்வி : வேறு அமைச்சின் கீழ் இருந்தால் அது சரியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை கொண்டிருக்கும் எனக் கூறுகின்றீர்களா?

பதில் : அப்படியே இருந்தது. எப்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஏதாவது முக்கியமான விடயம் இருந்தால் அதனைப் என்னுடன் பகிர்ந்துகொள்வார். தேவையான அவசியம் இருந்தால் மாத்திரமே அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏதாவது தகவல்களை நாம் அவர்களுக்கு அனுப்ப முடியாது. ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விடயங்களை நிர்வாக ரீதியாக செய்துகொள்ள முடியும். எனினும் அங்குள்ள நிலைமைகளைக் கண்காணிக்க பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் கிடையாது. நான் அதன் தலைமையகத்துக்குப் போணது கூடக் கிடையாது. அங்கு செல்வதற்கு முயற்சிகள் எடுத்தபோதும் அவை பலனளித்திருக்கவில்லை.

சரத் பொன்சேகா கேள்வி : தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் வேறு அமைச்சின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடும் நடைமுறை எப்போது ஆரம்பமானது ?

பதில் : எனது ஞாபகத்துக்கு அமைய ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு உள்ளது.

ஜயம்பதி விக்ரமரட்ன கேள்வி : தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு யார் அழைப்பை விடுப்பது?

பதில் : சாதாரணமாக பாதுகாப்புச் செயலாளர் தெரியப்படுத்துவார். 2016 ஏப்ரல் 20ஆம் திகதியின் பின்னர் நான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் பங்கெடுத்திருந்தேன். எனினும், 2018 ஒக்டோபர் 23ஆம் திகதியின் பின்னர் எந்தவொது பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. நான் அதில் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லையென எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கேள்வி யாரிடமிருந்து வந்தது?

பதில்: அப்போதிருந்த பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்னவிடமிருந்து. சாதாரணமாக வாய்மூலமே அழைப்பார்கள். பாதுகாப்புக் கவுன்சிலில் கலந்துரையாடப்படும் விடயங்கள் குறிப்பாக எடுக்கப்படுவதில்லை. பெரும்பாலும் வாய்மூலமே பேசப்படும். 2018 ஒக்டோபர் 23ஆம் திகதியின் பின்னர் ஒருநாள் பாதுகாப்புச் சபைக் கூட்டம் பற்றி அறிந்திருந்தேன். புpற்பகல் 4.30 மணியாகும் எனக்கு அழைப்பு வரவில்லை. நான் பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டேன். “உங்களை சங்கடப்படுத்துவதற்கு மன்னிக்கவேண்டும், ஜனாதிபதி உங்களை அழைக்கவேண்டாம் எனக் கூறியுள்ளார்” என பாதுகாப்புச் செயலாளர் எனக்குப் பதில் வழங்கினார். அப்படியாயின் எனது சார்பில் யாரையாவது அனுப்பவா எனக் கேட்டதற்கும் தேவையில்லையெனப் பதில் வழங்கப்பட்டது.

அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி : அப்படியாயின் ஏன் அழைக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கேட்கவில்லையா?

பதில்: சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினால் அதனை நம்புவதைவிடை வேறு என்ன செய்ய முடியும்.

பேராசிரியர் ஆஷ{ மாரசிங்க கேள்வி : ஒக்டோபர் 23ஆம் திகதி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?

பதில் : முக்கியமானதொரு விடயத்தைப் பற்றி மாத்திரம் பேசுவதற்காக அக்கூட்டம் கூட்டப்பட்டமையால் இறுதியில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

சரத் பொன்சேகா கேள்வி : அதன் பின்னர் நீங்கள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைக்கப்படவில்லையா?

பதில் : அசம்பாவித சம்பவம் நடைபெற்ற பின்னர் ஏப்ரல் 23ஆம் திகதி அழைத்திருந்தார்கள்.

ஜயம்பதி விக்ரமரட்ன கேள்வி : உங்களை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைக்காமைக்கு விசேட காரணம் ஏதாவது இருப்பதாக நம்புகின்றீர்களா?

பதில் : என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம் என்று சிந்தித்தேன்.

ஏம்.ஏ.சுமந்திரன் கேள்வி : நீங்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுபவர். உங்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் கூட முடியாது. அவ்வாறான நிலையில் நீங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாக ஏன் தெரியப்படுத்த முன்வரவில்லை?

பதில் : இதனைக் கேட்கச்சென்று நிலைமை வேறுபக்கம் திரும்பலாம் என்ற எண்ணத்தில் நான் எதனையும் கேட்கவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : ஒக்டோபர் 23ஆம் திகதி பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்தமை குறித்த விடயம் ஆராயப்பட்டதா?

பதில் : வழமைபோன்ற நடைபெற்ற பலவிடயங்கள் கலந்துரையாடப்படும்போது குறிப்பிட்ட விடயம் வந்தது. அதற்கு நான் பதிலளிக்கவேண்டியிருந்தது. சில விடயங்கள் இணங்கப்பட்டன.

எம்.ஐ.சுமந்திரன் கேள்வி : 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் ஐ.பி நிஷாந்தவின் இடமாற்றம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதா?

பதில் : அவர் சிறந்த அனுபவம் உள்ள அதிகாரி. குறித்த கடத்தல் சம்பவத்துடன் முப்படைகளின் பிரதானி சம்பந்தப்பட்டிருப்பதால் குறித்த பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பின்னர் நானே அந்த இடமாற்றத்தையும் இரத்துச் செய்தேன்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : எங்கிருந்த அந்த அழுத்தம் வந்தது?

பதில்: ஜனாதிபதியிடமிருந்தே அழுத்தம் வந்தது. ஜனாதிபதி கூறியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : தௌஹீத் ஜம்ஆத் அமைப்பை தடைசெய்வதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாளக்க.டி.சில்வா அறிக்கையிட்டிருந்தாரா?

பதில்: ஆம். இது தொடர்பில் பல விடயங்கள் பகிரங்கமாகக் கூறப்படவேண்டியுள்ளது. அசம்பாவிதம் இடம்பெற்ற பின்னர் பொலிஸ்மா அதிபரின் தவறினால்தான் முழு சம்பவமும் இடம்பெற்றது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நான் எந்த விடயத்தையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக ஊடகங்களுக்கு கதைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட சகல கத்தோலிக்க குடும்பங்களுக்கும் கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏப்ரல் 9ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கிடைந்த புலனாய்வுத் தகவல்களை நான் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனு;பபியிருந்தேன். நான்காம் திகதி புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது. புலனாய்வு விடயங்களை ஆராயும் வாராந்த கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அங்கு எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை.

ரவூப் ஹக்கீம் கேள்வி : இதற்கு வெளியில் எங்காவது இது பேசப்பட்டுள்ளதா?

பதில் : எனக்கு அதுபற்றித் தெரியாது. ஏப்ரல் 9ஆம் திகதி எனக்கு அறிக்கையொன்று வந்தது. சி.என்.ஐ பணிப்பாளரிடமிருந்து முதலில் அறிக்கையொன்று வந்தது. அதில் இந்திய உயர்ஸ்தானிகராலயம், கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றையதினம் அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளரிடமிருந்து அனுப்பப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பற்றியோ உயர்ஸ்தானிகராலயம் பற்றியே எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், மிகவும் இரகசியமானது என்றும் கூறிப்பிடப்பட்டிருந்தது. எனது பார்வைக்காக அனுப்பப்பட்ட அந்த அறிக்கைகள் குறித்து நான் பொலிஸ் அதிகாரிகளை விழிப்புணர்வூட்டத் தீர்மானித்தேன். இதற்கமைய நான்கு அதிகாரிகளைத் தெரிவுசெய்தேன்.

எனினும், இரண்டு பிரதான புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகளிலும் பரஸ்பரம் முரண்பாடான விடயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

அதேநேரம், 2018ஆம் ஆண்டு அல்குவைதாவுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டபோது அது பற்றி அரசாங்க புலனாய்வு சேவை மேற்கொள்வதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகளை நிறுத்துமாறு எமக்குப் பணிக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றிய விசாரணைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்திருக்கும்.

பேராசிரியர் ஆஷு மாரசிங்க கேள்வி : புலனாய்வு குறித்து ஆராயும் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் உள்ளதா?

பதில் : குறிப்பாக இக்கூட்டத்துக்கு பாதுகாப்புச் செயலாளர் தலைமை தாங்குவார். அதில் சி.என்.ஐ பணிப்பாளர் விளக்கமளிப்பார். ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை. 9ஆம் திகதி அறிக்கையின் பின்னர் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கிடைத்த கடிதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்க புலனாய்வுப் பிரிவின் தலைவரினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் 19ஆம் திகதி அனுப்பப்பட்ட அறிக்கையில் சஹரானுக்கு நெருக்கமான ஒருவரால் மோட்டார் சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நேரடியான எந்தத் தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. சஹரானின் பெயர் இக்கடிதத்தில் இருந்தாலும், ஏற்கனவே கூறப்பட்ட புலனாய்வுத் தகவல்களுடன் உள்ளட விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை.

20ஆம் திகதி அறிக்கையில் தேசிய தௌஹீத் ஜம்ஆத் தலைவர் சஹரான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இறுதியில் சஹரான் உள்ளிட்ட வலையமைப்புத் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ஆம் திகதி தகவல் கிடைத்தும் 21ஆம் திகதிவரை புலனாய்வுப் பிரிவினர் எவ்வாறான திட்டத்தையும் வகுத்திருக்கவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உங்களுக்கு அங்குள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து அறிக்கை கிடைக்கவில்லையா?

பதில் : சாதாரணமாக ஏதாவது ஒரு பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான இடத்துக்குள் ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது பற்றி அறிக்கையொன்றை எமக்கு அனுப்ப வேண்டும்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : கடிதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் புலனாய்வுத் தகவல் எப்போது கிடைத்தது எனத் தெரியுமா?

பதில் : எனக்குத் தெரியாது, எனினும், ஊடகங்களில் வெவ்வேறு தகவல்கள் உள்ளன.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : நீங்கள் அறிவித்தவர்களில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

பதில் : ஆம் நான் ஏற்கனவே கூறியதைப் போன்று விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லதீப்பே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு மேலதிக பொறுப்பில் இருக்கின்றார். எனினும் எந்தவொரு எந்தவொரு நபருக்கும் நாம் கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களையும் தெரியப்படுத்துவதில்லை. பிரபுக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிக்கு அனுப்பும்போது குறித்த பிரபுக்கு அறிவிப்பதா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். பொலிஸ்மா எந்தவொரு விடயத்தையும் ஜனாபதிதி நேரடியாக தெரியப்படுத்தவேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. புலனாய்வுத் தகவல்கள் அரசாங்க புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் ஊடாக ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்பப்படும்.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர : ஏப்ரல் 20ஆம் திகதி மாலை ஆகும்போது எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. எனது ஞாபகத்துக்கு அமைய மாலை 6.30க்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரம். முதலில் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பில் இருந்தார். ‘டுமாரோ டேஞ்சரஸ், சம்திங் கோயிங்டு ஹப்பன்’ எனக் கூறித் துண்டித்தார். அதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பில் வந்து, நிலந்த அழைப்பை ஏற்படுத்தினாரா எனக் கேட்டார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரேயடியாக எப்படியான அச்சுறுத்தல் ஏற்பட்டது. அப்போது நான் வீட்டில் இருந்தேன். உடனடியாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கு, மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு தகவலைத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன்.

மறுநாள் காலை 7.15 மணியளவில் மீண்டும் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பை ஏற்படுத்தி ‘டுடே சம்திங் கோயிங்டு ஹப்பின்ட்’ எனக் கூறினார். என்னால் முடிந்த மட்டத்தில் சகல நடவடிக்கையையும் எடுத்திருந்தேன். எனினும் மேல் மட்டத்திலிருந்து எனக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. பொலிஸாருக்கு மாத்திரம் பொறுப்பு அல்ல. சகலருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

ரவூப் ஹக்கீம் கேள்வி : ஏப்ரல் 9ஆம் திகதி அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்குவைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் தேவாலயங்கள் பற்றி நீங்கள் ஏன் யோசிக்கவில்லை?

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : உயர்மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்பது சரி. ஏப்ரல் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இவ்விடயம் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பற்றி பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதா என அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளரிடம் நீங்கள் கேட்டீர்களா?

பதில் : நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. நடைமுறையில் ஒருங்கிணைப்பது சி.என்.ஐ உடன் தொடர்புபட்டிருப்பார் என்பதால் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனக்கு முடிந்ததைச் செய்தேன்.

பேராசியரியர் ஆஷு மாரசிங்க கேள்வி : 2018 ஓகஸ்ட் 23ஆம் திகதிக் முன்னர் பொலிஸ் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனான தொடர்புகள் எப்படி இருந்தன?

பதில் : சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருக்கும்போது சில விடயங்களை செய்ய முடிந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நேரடியாகக் கதைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது. எனினும், பின்னர் நிலைமைகள் மாறியதும் குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின்னர் செயற்பாடுகள் கஷ்டமானது. அதன் பின்னர் பல விடயங்களில் காலம் தாழ்த்தும் நிலைமையே ஏற்பட்டது. கவலைக்குரிய விடயங்கள் இருக்கின்றன.

ரவூப் ஹக்கீம் கேள்வி: குற்றப் பலனாய்வுப் பிரிவினர் மாவனல்ல சம்பந்தின் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறப்பட்டனவா?

பதில் : குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தேவையாயின் உதவியைப் பொலிஸார் வழங்குவர். எனினும் அவர்கள் தமக்கே உரிய பாணியில் விசாரணைகளைத் தொடர்வார்கள்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : குண்டுத் தாக்குதல்களின் பின்னர் உங்களை பதவிவிலகுமாறு யாராவது கோரினார்களா?

பதில் : ஆம்

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : யார் பதவிவிலகக் கோரியது

பதில் : ஜனாதிபதி. ஏப்ரல் 23ஆம் திகதி இரவு எட்டுமணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு கூறினார். ஜிம்மில் இருந்த நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். நடந்த சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பு என்னுடையது, உரிய முறையில் தனக்குத் தெரியப்படுத்தவில்லையென்றார். பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையிலும் மௌனமாக இருந்தீர்கள். எனவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும். விசாரணைக் குழுவொன்றை அமைக்கப்போகின்றேன். அதில் தவறிழைத்தவர்கள் நீங்கள் என்றே தெரியவரும். ஓய்வூதியம் இன்றி வீடு செல்லப்போகின்றீர்களா? தவறை ஏற்றுக் கொண்டு பதவி விலகுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

சி.என்.ஐ அறிக்கை தொடர்பில் நான் முன்னர் அனுப்பியிருந்த பதில் கடிதத்தை காண்பித்தேன். அதனைப் பார்த்துவிட்டு எதுவும் பேசவில்லை. கடந்த 34, 35 வருடங்களாக பொலிஸ் சேவையில் இருக்கின்றேன். எப்போதும் பொலிஸைப் பற்றி சிந்திக்கும் ஒருவன். களவு பொய் செய்யவில்லை.

சிறுசிறு விமர்சனங்களைத் தவிர எந்த குற்றச்சாட்டுக்களும் என்மீது இல்லை. சேவையிலிருந்து செல்லும்போது ஓய்வூதியம் இன்றி சென்றால் பிள்ளைகளுக்கு என்ன கூறுவது. எனக்கு சொந்தமாக இருக்க ஒரு இடம்கூட இல்லை. ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டேன். 8.45 மணியளவில் நான் சென்றுவிட்டேன்.

அதன் பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கேட்ட கடிதத்தை இன்னும் தரவில்லையெனக் கூறியதுடன், ஏதோ கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை கடுமையாக ஏசினார்.

நான் எதுவும் பேசவில்லை மௌனமாக இருந்தேன். 29ஆம் திகதி கட்டாய விடுமுறைக் கடிதம் வழங்கப்பட்டது. எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி தருவதாகக் கூறினார். எனினும் அவ்வாறான வரப்பிரசாதங்களை நான் எதிர்பார்ப்பவன் அல்ல. நான் அவ்வாறு செய்தால் பொலிஸாரைக் காட்டிக்கொடுப்பதாக அமைந்துவிடும்.

தவறு செய்யாமல் தவறை ஏற்றுக்கொள்வதா. பாதுகாப்பில் காணப்படும் ‘சிஸ்டம் பெயிலியரே’ இதற்குக் காரணம். அது மாத்திரமன்றி ‘பாதுகாப்புத் துறையில் காணப்படும் ‘புரட்டக்கோல் ஒருங்கின்மை’யும் இதற்கான காரணமாகும்.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை