அரச அதிபரின் உறுதிக் கடிதம் நிராகரிப்பு; வர்த்தமானியை வெளியிடக் கோரிக்ைக

கல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;

பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப் நிருபர்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு நேற்று முன்தினம் மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதி நிதியாக மேலதிக அரசாங்க அதிபர். ஜெகதீஸன், பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் உள்ளிட்ட குழுவினர் சென்று மாவட்ட அரசாங்க அதிபரினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கடிதத்தை காண்பித்து நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வில் முடிவடைந்தது.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். இல்லையெனில் நாம் இந்த இடத்தில் எமது சமூகத்திற்காகவும் உரிமைக்காகவும் உயிர்த் தியாகம் செய்வோம் என

உண்ணாவிரதிகள் தெரிவித்துவிட்டனர். இதேவேளை, உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள கல்முனை சுபத்திராராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின தேரரின் உடல் நிலை மோசமடைந்ததால், நேற்று முன்தினம் அவர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும், உடல் சோர்வடைந்த நிலையிலேயே ஏனைய உண்ணாவிரதிகளும் காணப்பட்டனர். உண்ணாவிரதிகளுக்கு ஆதரவாகப் பெருந்திரளான பொதுமக்களும் அந்த வளாகத்தில் கூடியுள்ளனர். தேரருடன் கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களோடு பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன், கல்முனை மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 'பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் ஒருவரை நியமிக்க வேண்டும்', 'பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை