இலங்கையை எவரும் தோற்கடிக்க முடியாது

கோழைத்தனமான செயல்களால்

பிரதமர் மோடி

மைத்திரி - மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை

இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்

கோழைத்தனமான செயல்களால் இலங்கையின் உத்வேகத்தை தோற்கடிக்கமுடியாது. இலங்கையுடன் எப்போதும் இந்தியா தோளாடு தோள் நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொழும்பில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இலங்கைக்கு சில மணிநேர குறுகிய விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர்,தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களைப் பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், இதிலிருந்து இலங்கை மீண்டெழும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

மாலைதீவு சென்றுவிட்டு இந்தியா திரும்பும் வழியில் ஐந்து மணித்தியால விஜயமொன்றை இவர் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலனா குழுவினர் ஆகியோரைச் சந்தித்தும் கலந்துரையாடினார்.

இலங்கையுடன் சேர்ந்து இந்தியா பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கும் என்பதையும் இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் சுட்டிக்காட்டியிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர்,

அங்கிருந்து நேரடியாக குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு மலர்ச்செண்டு வைத்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான இருதரப்புச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பயங்கரவாத தாக்குதலின் காரணமாக பதற்ற நிலை காணப்படும் இந்தச் சூழ்நிலையில் தனது நாட்டுக்கு வருகை தந்து உலகத்தினருக்கு வழங்கிய நற்செய்தி தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இந்த விஜயத்தினால் இரு நாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்திருப்பதாகவும் அவர், சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விஜயமானது இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இக்கட்டான சூழ்நிலைகளில்

அயல் நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது தனது கடமையாகுமென்று இதன்போது இந்திய பிரதமர் நரேந்தர மோடி தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கை எதிர்காலத்திலும் இவ்வாறே பாதுகாக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்தோடு அனைத்து தரப்புகளின் உதவியுடன் சகல இனத்தோருக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில் கடமையாற்றிவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் இந்திய பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்காகிய இரு நாடுகள் என்ற வகையில், பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்க வேண்டுமென்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமென்றும் இருநாட்டு தலைவர்களும் இணங்கிக் கொண்டனர்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர், இந்திய இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை இந்தியப் பிரதமர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கையின் ஒற்றுமைக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்ற விடயத்தை மோடி சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பு முடிந்ததும் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் இந்தியப் பிரதமர் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்புத் தயாரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாகக்க கலந்துரையாடப் பட்டது.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தில் இலங்கையும் அமைந்திருந்தது.

இலங்கை வந்த தமது நாட்டுப் பிரதமரைப் பார்வையிட இந்தியர்கள் பலர் இந்திய இல்லத்தில் கூடியிருந்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்த நரேந்திர மோடி, அங்கிருந்த இந்தியர்களுடன் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வுகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 4 மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். இவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழியனுப்பி வைத்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை