புலனாய்வு தகவல்களுக்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படத் திட்டம்

 நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென உறுதிப்படுத்தவோ உத்தரவாதமளிக்கவோ முடியாது. புலனாய்வு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் இணைந்துச் செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

மாதுருஓயா இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு மேலும் கூறுகையில்

இந்தியா ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புத் தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து முப்படையினரும், பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அவசரகாலச் சட்டம் மேலும் ஒருமாதகாலத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. எமது பக்கத்தில் எடுக்க வேண்டிய அனைத்துத் தீர்மானங்களையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எடுப்போம். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்புகளை வழங்குவது இராணுவத்தினர் என்ற அடிப்படையில் எமது கடமையாகும்.பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய வலையமைப்பை இனங்கண்டுள்ளோம். இதற்கென விஷேடமாக இந்தியாவுடன் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இணைந்து செயற்படுகின்றோம்.

நாம் சர்வதேச பயங்கரவாதத்திற்கே முகங்கொடுத்துள்ளோம். நாடுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கிடையே உறவுகள் பேணப்பட வேண்டியது அவசியமாகும்.

எந்தவொரு நாட்டிலும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென உறுதிப்படுத்தவோ உத்தரவாதமளிக்கவோ முடியாது. இதன் காரணமாக நாடுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கிடையே உறவுகள் பேணப்பட வேண்டும்.

யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைதத்துவம் காரணமாக பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்தக் காலப்பகுதிக்குள் இலங்கை இராணுவத்திற்கு அதி விசேடமான தைரியமுள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மாதுருஒயா இராணுவ தலைமையகத்தால் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை