கம்போடியாவில் ஏழு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் பலர் தொடர்ந்தும் காணாமல்போயுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் நீடித்து வரும் நிலையில் குறைந்தது 24 பேர் காயமடைந்திருப்பதோடு பலரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
துறைமுக நகரான சிஹனோக்வில்லெவில் சீன நிறுவனம் ஒன்றினால் இந்தக் கட்டிடம் நிர்மாணப் பணியில் இருந்தபோதே இடிந்து விழுந்துள்ளது.
அதில் மாண்டோர், சிக்கியிருப்போர் பெரும்பாலும், கட்டுமானத் துறை ஊழியர்களாவர். சம்பவம் ஏற்பட்டபோது, சுமார் 30 ஊழியர்கள் கட்டிடத்தில் உறங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிஹனோக்வில்லெவில் அண்மைக்காலத்தில் சீன நிர்மாணத்தில் ஹோட்்டல்கள் மற்றும் கசினோக்கள் உருவெடுத்து வருகின்றன.
இந்த விபத்துத் தொடர்பில் சீன கட்டுமான நிறுவன உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய நில உரிமையாளரும் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கணிசமான அளவானவர்கள் காணாமல்போயிருப்பதாகவும் அவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பெரும் இரும்புத் தூண்களை வெட்டி அகற்றியபடி 1000 பேர் வரை இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
“கட்டிடம் இடிவற்கு முன்னர் பெரும் அதிர்வு ஒன்று ஏற்பட்டு பின்னரே அது சரிந்து விழுந்ததது” என்று அங்கு பணியாற்றும கட்டுமான ஊழியர் ஒருவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்தக் காலம் உயிர் தப்புவதற்கு போதுமாக இருக்கவில்லை என்றும் அவர் விபரித்துள்ளார்.
from tkn