கம்போடியாவில் இடிந்த கட்டிடம் 2 நாட்களின் பின் இருவர் மீட்பு

கம்போடியாவில் விபத்துக்குள்ளான 7 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு பேர், 2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த இருவருக்கும் தண்ணீர் மற்றும் முதலுதவிகள் கொடுத்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சீனாவுக்குச் சொந்தமான இந்தக் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதே எண்ணிக்கையானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு இல்லை என்று நம்பப்பட்டிருந்தபோதே இந்த இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். “நான் மீண்டும் பிறந்தது போல் உணர்கிறேன், நான் உயிர் தப்புவேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை” என்று இவ்வாறு காப்பாற்றப்பட்ட ஒருவரான ரொஸ் சிதா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“நான் உதவிக்காக அழைத்தேன் எவரும் கேட்கவில்லை. கடைசியில் அவர்களுக்கு என்னைக் கேட்டது. மீட்பாளர்கள் எனக்கு அருகில் வந்தபோது என்னை வெளியே எடுத்து மீட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டிட விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நில உரிமையாளரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை