ஐ.எஸ் எதிர்ப்பு அமெரிக்க கூட்டணியின் தாக்குதல்களில் 1,300 பொதுமக்கள் பலி

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 பொதுமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் தெரிவித்துள்ளன.

எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,000 முதல் 13,000 வரை இருக்கும் என்று ‘ஏர் வோர்ஸ்’ எனும் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான தாக்குதல்களைத் ஆரம்பித்தது முதல் இதுவரை 34,502 வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்த பின்னர் அந்தப் பகுதிகளில் தாக்குதல் ஆரம்பமானது.

எட்டு மாதங்களுக்கு முன்னர் தங்கள் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 1,100 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தங்கள் தாக்குதல்களால் தான் இறந்தார்களா என்று மேலும் 111 மரணங்களை ஆராய்ந்து வருவதாக அந்தக் கூட்டணி தற்போது தெரிவித்துள்ளது.

எனினும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.

உண்மை நிலவரத்தை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஆழமாக மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் மூத்த அவசர கால ஆலோசகர் டொனடெல்லா ரோவேரா குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக 2017இல் ஐந்து மாதங்கள் நடந்த தாக்குதல்களில் மட்டும் 1,600க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கடந்த மாதம் செயற்பாட்டாளர்கள் நடத்திய கள ஆய்வு கூறுகிறது.

ரக்கா நகரம் ஐ.எஸ் அரசுக்கு செயல்முறையில் தலைநகராக விளங்கியது.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை