எல்லா இன மக்களும் சந்தோஷமாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும்

அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி

நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சந்தோஷமாகவும், ஒற்மையாகவும், சுபீட்சமாகவும் வாழக்கூடியவாறு நமது நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபடவேண்டும் என 24வது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் மஹிந்த முதலிகே தெரிவித்தார்.

பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகம் ஏற்பாடு செய்த பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையிலான சந்திப்பும், இப்தார் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (26-) எம்.எல்.முபாறக் மதனி தலைமையில் பள்ளிவாசலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜய சேகர,விஷேட அதிரடிப்படை கல்முனை முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன, கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றக்கீப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 மேலும் அவர் உரையாற்றுகையில், முப்பது வருடங்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த பத்து வருடங்களாக அமையான சூழல் நிலவுகின்ற நிலையில் இந்த துர்ப்பாகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த நாடு சுதந்திரம் பெற்ற போது ஆரம்பத்தில் இரண்டே இரண்டு அரசியல் கட்சிதான் இருந்தன. அதிலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சமூகங்கள் சார்ந்ததாகவும், இனங்கள் சார்ந்ததாகவும்,சமயங்கள் சார்ந்ததாகவும் அதிகமான கட்சிகள் உருவாகிவிட்டன.

இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் சகோதரர்களாக வாழ்வதன் மூலமே எமது எதிர்கால சந்ததிக்கு ஐக்கியமான நல்ல சுபீட்சமான நாட்டை கையளிக்க முடியும்.

இந்த நாட்டில் இன்னும் ஒரு பயங்கரவாதமோ.தீவிரவாதமோ உருவாக நாங்கள் இடமளிக்க முடியாது .சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி தீவிரவாதத்தை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று படுவோம் எனத்தெரிவித்தார். 

(மருதமுனை தினகரன்,பெரியநீலாவணை தினகரன் நிருபர்கள்)

Tue, 05/28/2019 - 14:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை