இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடர்; இரத்து செய்த பங்களாதேஷ்

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, காலவரையறையின்றி ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பிறகு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தது.

இந்தத் தொடரை ஜூலை 25ஆம், 27ஆம் மற்றும் 29ஆம் ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இத்தொடரை, இரத்து செய்வதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலொன்றைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கான பங்களாதேஷ் அணியின் சுற்றுப்பயணம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை நினைவிருக்கலாம்.

இத்தொடர் இரத்து செய்தமை குறித்து, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டுதான் இந்த தீர்மானத்துக்கு வந்தோம். அதுதவிர இந்த தொடரை இரத்து செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் பங்களாதேஷ் மாத்திரமல்ல எந்தவொரு சர்வதேச அணியும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட முன்வரமாட்டாது என நம்புகின்றேன்.

அதுமாத்திரமின்றி, எதிர்காலத்தில் இன்னும் பல தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கவனத்தில் எடுக்காமல் பங்களாதேஷ் அணியை அங்கு அனுப்புவதென்பது சாத்தியமில்லை. அதேபோல, குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபை, பாதுகாப்பு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பிறகுதான் நாங்கள் இந்த தீர்மானத்துக்கு வந்தோம்.

குறித்த தொடரை நடத்துவது குறித்து எமது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்குச் சென்று விசேட ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகுதான் எமது அணியை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் தீர்மானிப்போம். எதுஎவ்வாறாயினும், தற்போதைய நிலையில் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம்” என கூறினார்.

குறித்த தொடரை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட போதிலும், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர், குறித்த காலப்பகுதியில் நடைபெறவிருந்ததால் அதை ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு இருநாட்டு அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் ஏ கிரிக்கெட் அணியும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருந்தது. இந்த தொடரும் தற்போது இரத்து செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருந்த இலங்கைக்கான பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் சுற்றுப்பயணமானது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலொன்றைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கான பங்களாதேஷ் அணியின் சுற்றுப்பயணம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை நினைவிருக்கலாம்.

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை