மனைவி, மைத்துனர், மாமியாரின் கணக்குகளும் ஆராய்வு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிப்பு
மிக் விமானங்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து தெளிவாவது என்னவென்றால் உதயங்க வீரதுங்க என்பவரது இந்நாட்டிலுள்ள கணக்கிற்கு நான்கு நாடுகளிலிருந்து பணம் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (28) கோட்டை மாஜிஸ்திரேட் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது.
சைப்பிரஸ், பனாமா உள்ளிட்ட நாடுகளிடம் நிதி பரிமாற்றம் தொடர்பாக கேட்கப்பட்டிருந்த ஆவணங்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சிரேஷ்ட உயர் சட்டத்தரணி உதார கருணாதிலக நீதிமன்றில் தெரிவித்தார். மேலும் இரண்டு நாடுகளின் கணக்குகள் தொடர்பாகவும் தகவல்கள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சைபிரஸ், பனாமா போன்ற நாடுகளிலிருந்து பணம் அனுப்பிய நிறுவனங்களின் பணிப்பாளர்களாக உக்ரேன் நாட்டவர்களே நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் அமைந்துள்ள பெரிமிஸா நிறுவனத்தின் பணிப்பாளரான சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் டீ.எஸ்.லீ.என்.ஜே. லெக்ஹிமி, பெரகடோவ் தொடர்பாக வெளியிடப்பட்ட சர்வதேச பிடியாணைகளின்படி சிவப்பு அறிவித்தல் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதேவேளை குர்திர்கோவி என்னும் சந்தேக நபர் தொடர்பாகவும் பிடியாணை பிறப்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
உதயங்க வீரதுங்கவை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் துபாய் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 21ம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.
இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் கணக்கிலிடப்பட்ட வெளிநாட்டு பணம் தொடர்பாகவும், மனைவி, மைத்துனர். மாமியாரின் கணக்குகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்கு இடமான வகையில் டொலர் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இந்நாட்டிற்கு பணத்தை டொலர் மூலம் அனுப்பிய சைப்பிரஸ் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (28) நடைபெற்ற வேளையிலேயே அவர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார். விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பாக நிதி குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் விசாரணை அதிகாரி நிஹால் பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
from tkn