வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகளை வைத்திருந்தால், அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரு தினங்களுக்குள் அவற்றை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்றபோதே, பொலிஸ ஊடகப் பேச்சாளர் இந்த அறிவித்தலை விடுத்தார்.
இந்த ஊடகவியாலளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, அவசரகால நிலைமை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இதற்கொன 48மணித்தியால கால அவகாசம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சட்ட ரீதியில் அனுமதி பெற்று ஆயுதங்கள் வைத்துள்ளவர்கள் அல்லது, தன்னிடம் இருக்கும் ஆயுதத்திற்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்கள் இந்த அறிவுறுத்தல்களை கவனத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.
(எம்.ஏ.எம்.நிலாம், ஸாதிக் ஷிஹான்)
from tkn