பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆற்றல் ஜனாதிபதிக்கே இருக்கிறது

உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர், பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள்

 

தொடர்பான இராஜாங்க அமைச்சர் Ben Wallace நேற்று (03) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத சாவல்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளினால் வெற்றிகரமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளமை தொடர்பில் அவர் இதன்போது ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகுமென தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இத்தகைய உலக பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி அவசியமாகுமெனவும் பிரிட்டன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த துன்பியல் சம்பவத்திற்கு தமது அனுதாபங்களை தெரிவித்து இரண்டாவது எலிசபெத் மகாராணி, பிரிட்டன் பிரதமர் தெரேசா அம்மையார் உள்ளிட்டோர் அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்திகள் மற்றும் இந்த இக்கட்டான சூழலில் பிரிட்டன் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவதற்காக பிரிட்டன் புலனாய்வு பிரிவின் விசேட குழுவொன்றை விரைவில் நாட்டிற்கு அனுப்பி வைத்தமைக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரிட்டன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் வெவ்வேறு உத்திகளை கையாளுவதனால் இவ்வாறானதொரு பாரிய இயக்கத்தை தோற்கடிப்பதற்கு அனைத்து நாடுகளினதும் புலனாய்வு சேவைகளையும் இரகசிய தகவல்களையும் பரிமாறிக்கொள்ளுதல் அடிப்படை தேவையாகுமெனக் குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பிரிட்டன் இராணுவத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரியாக கடமையாற்றி, அதன் பின்னர் அரசியலுக்கு பிரவேசித்த Ben Wallace, பிரிட்டன் பாதுகாப்புத் துறையினர், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை நோக்கி மாத்திரம் தமது கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் அல்கைதா இயக்கத்தினால் லண்டன், மென்செஸ்டர் நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல் மற்றும் எச்சரிக்கைகளை இனங்கண்டுகொள்வதற்காக பிரிட்டன் அரசாங்கம் பின்பற்றியதை போன்று சகல உள்நாட்டு புலனாய்வு துறையினரின் தகவல்களை ஒன்று திரட்டும் ஒன்றிணைந்த விசாரணை மையமொன்றை தாபிக்க வேண்டுமெனவும் அதற்கு தேவையான ஒத்துழைப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க பிரிட்டன் அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் Tom Burn, பிரதி பிரிட்டன் உயர் ஸ்தானிகர் Tom Hurd மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் சித்தார்த்த விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Sat, 05/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை