நாட்டின் தற்போதைய சு+ழ்நிலையை இனவாதத்துக்காக பயன்படுத்த வேண்டாம்

பயங்கரவாத சவால்களிலிருந்து நாட்டை விடுவித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குரல் கொடுப்பதை விடுத்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானமான சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும்.

விமர்சனங்கள் தேவையானவை என்ற போதிலும் அவை நியாயமானதாக இருக்க வேண்டும் எனவும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலான விமர்சனங்களும் சரியான தகவல்களை அறியாது முன்வைக்கப்படும் கருத்துக்களும் பலனற்றவை.

பல மதங்களை பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு நாட்டில் எந்தவொரு மதத்தினரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கக் கூடாது.

பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கருத்துக்களை தெரிவிக்கும்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான புரிந்துணர்வுடனும் புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

அப்பாவி மக்களை படுகொலை செய்த கொடிய பயங்கரவாதிகளை தமது இனத்தவராக கருதப்போவதில்லை நாம் முஸ்லிம் சமூகமாகிய அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

அதனால் இந்த அடிப்படைவாத பயங்கரவாதிகளை முற்றாக வேரறுப்பதற்கு நாம் பாதுகாப்பு துறையினருக்கு அனைத்து விதத்திலும் உதவ தயாராக உள்ளோம்.

அத்துடன் அனைத்து முஸ்லிம் இனத்தவரையும் பயங்கரவாதிகளாக கருத வேண்டாம். சில சந்தர்ப்பங்களில் இந்த கொடிய பயங்கரவாதிகளை முஸ்லிம் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதனால் எமது சமூகம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கின்றது.

மேலும் மனிதாபிமானமற்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற இஸ்லாமிய நூல்களை கைப்பற்றும் நடவடிக்கைகள் போன்ற சிறிய சம்பவங்களினால் முஸ்லிம் சமூகம் முகங்கொடுத்துள்ள இக்கட்டான சூழ்நிலை தொடர்பிலும் ஜனாதிபதி யிடம் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் முகநூல் ஊடாக பகிரப்படும் இனவாத கருத்துக்கள் காரணமாக அனைத்து இன மக்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியதோடு தமது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பின்புலமாக செயற்படும் நபர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சவாலாக அமைந்திருக்கும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இஸ்லாமிய சிவில் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டினர். (ஸ)

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை