பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி:

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, - பாகிஸ்தான் இடையிலான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்தினம் பிரிஸ்டோலில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிப் அலி அரைச் சதமடித்தார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், டாம் குர்ரான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பாக ஆடினர். ஜேசன் ராய் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்து அசத்தினார். அவர் 128 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட், மொயின் அலி ஆகியோர் பொறுப்புடன் ஆட இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை