தகவல் வழங்கியோருக்கு சன்மானம்

பொலிஸாருக்கு பதவி உயர்வு

சாய்ந்தமருது பகுதி மக்கள் தேசபக்தியுடையவர்கள் -பதவி உயர்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருந்தமை தொடர்பில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கிய மூன்று முஸ்லிம்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வீதம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் நேற்று இந்த சன்மானத்தை வழங்கியுள்ளது. 

மூன்று சிவிலியன்கள் வழங்கிய தகவலை பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கிய போக்குவரத்து பிரிவின் பொலிஸ் காண்ஸ்டபிள், பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய சார்ஜன்டாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் ஐந்து இலட்சம் ரூபாவையும் சன்மானமாக வழங்கியுள்ளது.  

சாய்ந்தமருதில் பதுங்கி இருந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய அப்பகுதி மக்கள் தேசபக்தியுடையவர்கள் என  பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும் பொலிஸ் உத்தியோகத்தர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 
நேற்று (3) தனக்கு கிடைக்கப்பெற்ற பதவியுயர்வு மற்றும் வெகுமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இவ்வாய்ப்பு அதிஸ்டம்.  எனது மக்கள் தொடர்பாடலுக்கு கிடைத்த வெகுமதி என கூறினார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது, கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு 2015 ஆண்டு காலப்பகுதியில் இருந்து பணியாற்றுவதாகவும் அவ்வாறு பணியாற்றும்போது அன்றையதினம் (26) அன்று தேசபக்தி மிக்க மக்களில் இருவர் என்னை சந்தித்து சம்பவத்தை விபரித்தனர். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நான், அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை  அறிந்து உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியதனால், பாரிய அழிவு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது என்பதைநினைக்கும் போது ஆறுதலாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறினார்.
 
மேற்குறித்த பொலிஸ்  உத்தியோகத்தர் தற்போது சார்ஜன்ட் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட மகிழ்ச்சியுடன், தனது பெற்றோர் விவசாயம் செய்தே தனக்கு  கல்வி கற்பித்ததாகவும் குடும்பத்தில் இரண்டு அண்ணாக்களுடன் தான்  3 ஆவது பிள்ளை என குறிப்பிட்டார்.
 
36 வயதை உடைய   டபிள்யு.டி.சுமிந்த நிஹால் வீரசிங்க    2009 ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கை பொலிஸில் இணைந்து கொண்டுள்ளார். மொனராகலை மாவட்டத்தில் எத்திமலே கிராமத்தில் உள்ள எத்திமலே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். இவர் கல்முனை பிரதேச மக்களுடன் நட்புடன் பழகுகின்ற போக்குவரத்து துறை பொலிஸ் உத்தியோகத்தராவார்.

 

(புங்குடுதீவு குறுப் நிருபர்- பாறுக் ஷிஹான் சாய்ந்தமருதிலிருந்து)
(சாதிக் ஷிஹான்)

Sat, 05/04/2019 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை