உலகக் கிண்ண கிரிக்கெட்: மேற்கிந்தியதீவு துணை தலைவராக கெயில்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்தியதீவு அணியின் துணை தலைவராகக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் 30 ம் திகதி முதல் ஜூலை 14-ம் திகதி வரை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் மேற்கிந்தியதீவு அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் சிக்சர் மன்னன் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில் (வயது 39) மற்றும் ரசல், கேமர் ரோச், ஹெட்மயர், பிராவோ, பிராத்வைட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உலகக் கிண்ணத்தில் விளையாடும் மேற்கிந்தியதீவு அணியின் துணைத்தலைவராக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை துணை தலைவராக நியமனம் செய்ததை, தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் பல்வேறு வீரர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுபற்றி கெயில் கூறுகையில், “மேற்கிந்திய அணிக்காக எந்த போட்டியில் விளையாடினாலும் அது எனக்கு கௌரவம். அதிலும் இந்த உலகக் கிண்ணம் எனக்கு சிறப்பு வாய்ந்த தொடர் ஆகும். ஒரு மூத்த வீரராக, அணியின் தலைவர் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாக அணியின் வெற்றிக்கு பாடுபடுவது எனது பொறுப்பு. அநேகமாக இது மிகப்பெரிய உலகக்கிண்ண தொடராக இருக்கும். அதனால், எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும். இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நாம் சிறப்பாக விளையாடுவோம் என்பதை நான் அறிவேன்” என்றார்.

39 வயதான கெயில் மேற்கிந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 289 ஒருநாள் போட்டிகள், 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 992 ஓட்டங்கள் குவித்துள்ளார். 2007 முதல் 2010 வரை சுமார் 90 போட்டிகளுக்கு தலைவராக பணியாற்றியுள்ளார்.

உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக மேற்கிந்திய அணி மே 26 முதல் 28 வரை தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. உலகக் கிண்ண தொடரில், மேற்கிந்திய அணி எதிர்வரும் 31-ம் திகதி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை