தமிழர்கள் அன்று எதிர்கொண்ட அவலங்கள் முஸ்லிம்களுக்கும்

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சந்தேகங்கொள்வதை நிறுத்த வேண்டும்

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றால் தமிழர்கள் எதிர்கொண்ட அவலங்களையே முஸ்லிம் சமூகத்தினர் தற்பொழுது எதிர்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாரோ ஒரு சிறுகுழு செய்த மோசமான காரியத்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலைமை முற்றாக துடைத்தெறியப்பட  வேண்டும். முஸ்லிம் பெயரை வைத்திருந்த காரணத்தினால் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவலையடைவதாவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று நடைபெற்றது. முதலாவது நாளான நேற்றையதினம் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அப்பாவி முஸ்லிகள் மீது தாக்குதல்களும், சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெயர் வைத்திருக்கின்ற காரணத்துக்காக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. தமிழர்கள் பட்ட அவலங்களை அவர்கள் தற்பொழுது எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சகோதரர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரி ஒருவர் பயணித்த காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனையிறவில் 30 நிமிடங்கள் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த பஸ் எழுதுமட்டுவாழ் பகுதியில் ஏற்கனவே 17 நிமிடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி வடக்கில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஊடகங்கள் முஸ்லிம் தலைவர்களைப் பிழையாக சித்தரிப்பது நிறுத்தப்பட வேண்டும். வேண்டும் என்றே சில ஊடகங்களும், இணையத்தளங்களும் முஸ்லிம் தலைவர்களை இலக்குவைத்து மோசமான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை