ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் மட்டக்களப்பு ஒல்லிக்குளத்தில் முற்றுகை

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி இடமாகவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் உள்ள பயிற்சி முகாம் ஒன்று நேற்று அதிகாலை விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்த முகாம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினை

சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்துல் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முகாமிலேயே சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலில் பலியான தற்கொலைதாரியான ரில்வான் என்பவர் 2017ஆம் ஆண்டு பயிற்சியின்போது குண்டுவெடித்து கைவிரல்களையும் கண் ஒன்றையும் இழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிருந்தே தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் குண்டுகள் இங்கிருந்தே அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் முகாமில் இருந்து குண்டுகளை அடைத்து கொண்டுசெல்ல பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்குழாய்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற குழாய்களே கடந்த 21ஆம் திகதி கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு அருகில் குண்டுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இங்கிருந்துதான் அங்கு கொண்டுசெல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

இதேநேரம் கைப்பற்றப்பட்டுள்ள முகாமில் பல்வேறு பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நூறு மீற்றர் தூரத்திற்குள் யாரும் நுழையும்போது அதனைக்கண்டுகொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் முகாமில் இருந்து இலகுவில் இரகசியமான முறையில் வெளியேறிச்செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

கல்லடி குறூப் நிருபர்

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை