பெரியகல்லாறில் நீராடிய இளைஞர் சகதியில் மூழ்கி மரணம்

பெரியகல்லாறில் நீராடிய இளைஞர் சகதியில் மூழ்கி மரணம்-Youth Drown and Death-Periyakallar-Kaluwanchikudy

காப்பாற்ற சென்றவர் மயிரிழையில் உயிர் பிழைப்பு

நண்பர்களுடன் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு எதிரே உள்ள நீரோடையில் நீராடிய, ரீ. திமோத்தி ஆகாஷ் (20) எனும் இளைஞனே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இந்த இளைஞன் சற்று நேரத்தில் அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து மூழ்கியுள்ளார்.

நீண்டநேர தேடுதலின் பின்னர் நீரோடையின் சகதியில் இருந்து மீட்கப்பட்ட அவரை  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தபோதும் அங்கு அவரைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்துள்ளார்.

சகதியில் மூழ்கி மரணித்த இந்த இளைஞர் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற இருந்தவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த இளைஞர் சகதியில் மூழ்கி தத்தளிப்பதை அவதானித்த நண்பர்களில் ஒருவர் இளைஞனைக் காப்பாற்ற முற்பட்டபோது அவரும் சகதியில் தத்தளித்து பின்னர் ஒருவாறு மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றனர்.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக  கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்) - வ.சக்திவேல்)

Mon, 05/20/2019 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை