ஆசிய சம்பியனாக திகழும் இலங்கையின் தேசிய வலைப்பந்து அணி, அதன் தலைமைப் பயிற்சியாளரான திலகா ஜினதாசவின் ஆளுகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெறவுள்ள வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு தேவையாக இருக்கும் விடயங்கள் எப்படி செய்து கொடுக்கப்படப்போகின்றது என்பது தொடர்பில் அண்மைய ஊடக சந்திப்பு ஒன்றில் பேசியிருக்கின்றார்.
உலகக் கிண்ண தயார்படுத்தல்களுக்காக இலங்கை வலைப்பந்து அணியினை ஆபிரிக்க நாடு ஒன்றுக்கு சுற்றுப் பயணம் அனுப்புவது இல்லை என கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இது தொடர்பில் கேள்வி ஒன்று எழுப்பபட்டிருந்தது. அதற்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“நாங்கள் இது தொடர்பான தீர்மானங்கள் எதனையும் (வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்றை வழங்காதது தொடர்பில்) இன்னும் எடுக்கவில்லை. இலங்கையின் வலைப்பந்து சம்மேளனம் அவர்களது திட்டத்தை எங்களுக்கு தர வேண்டும். விளையாட்டு அமைச்சு அதன்படியே வேலைகளைச் செய்யும். நல்ல மக்களிடம் நல்ல நோக்கு இல்லை என்றால் தான், எங்களிடம் பிரச்சினை இருக்கின்றது. நாங்கள் அவர்களிடம் திட்டத்தை வழங்கும்படி கேட்டுவிட்டோம்.”
“வலைப்பந்து வீராங்கனைகள் (உலகக் கிண்ணத்திற்காக) இங்கிலாந்து செல்லவிருக்கின்றனர். விளையாட்டு அமைச்சின் சார்பாக நாங்கள், 750 இற்கு மேலான வீர, வீராங்கனைகளை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (இந்த ஆண்டு) அனுப்பவுள்ளோம். இதற்காக மாத்திரமே, எமக்கு இந்த ஆண்டு மிக அதிக செலவு செய்ய வேண்டி இருக்கின்றது. (இதனால்) விளையாட்டு அமைச்சின் நிதியும் இல்லாமல் போகின்றது. (இலங்கை) கிரிக்கெட் முன்னே வந்து விளையாட்டு அமைச்சின் நிதிக்காக உதவ இருப்பதாக தெரிவித்துள்ளது.” என்றார்.
அமைச்சரின் கருத்துப்படி, ஆபிரிக்க சுற்றுத் பயணத்திற்காக தேசிய வலைப்பந்து அணிக்கு உதவ மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையே விளையாட்டுத்துறை அமைச்சு கொண்டிருப்பது தெரிய வருகின்றது. இதேநேரம், விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தில் அண்மையில் இடைக்கால நிர்வாகக் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது தொடர்பிலும் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
“வலைப்பந்து சம்மேளனத்திற்குள் ஒரு பெரிய சிக்கல் இருக்கின்றது. அவர்களிடம் இருந்து நிறையப்பேர் வந்து எங்களிடம் இப்போதைய கட்டமைப்பும், அதனை வழிநடாத்தியவர் தொடர்பிலும் திருப்தி இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால், எனக்கு தெரிந்தவரையில் கடந்த இரண்டு வருடங்களிலும் அவர்கள் தேசிய வலைப்பந்து அணியினை சரியான பாதைக்கு கொண்டு வர அதிக விடயங்களை செய்திருக்கின்றனர். எனினும், சிலர் தமக்கு யார் விருப்பமோ அவர்களுக்கு சார்பான அறிக்கைகளினையே வெளியிடுகின்றனர்.
from tkn