வெசாக்கையிட்டு ஏற்பாடு
வெசாக் பெளர்ணமி தினத்திலிருந்து தொடர்ந்து மூன்று தினங்களாக தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக சீகிரியாவை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற் கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து களையிழந்து காணப்பட்ட, சீகிரியாவை இலவசமாகப் பார்வையிடுவதற்கு தேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதென, மத்திய கலாசார முக்கோண நிதியம் மேற்கொண்ட தீர்மானத்தைத் தொடர்ந்து முதலாவது தினமே (18) சுமார் 4,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக சீகிரிய அபிவிருத்திமுகாமைத்துவ பிரிவு தெரிவித்தது.
இதன்போது வருகை தந்தவர்களுக்கென மத்திய கலாசார முக்கோண நிதியத்தினால் குளிர்பான தானம் வழங்கும் "தன்ஸல்" நிகழ்வொன்றும் நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உள்ளூர் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பின் பொருட்டு பொலிஸ். இராணுவம், விமானப் படை மற்றும் மத்திய கலாசார முக்கோண நிதியத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் பணியில் ஈடு படுத்தப் பட்டிருந்ததாக சீகிரிய அபிவிருத்திப் பிரிவின் முகாமையாளர் மேஜர் அநுர நிஸாந்த தெரிவித்தார்.
வெசாக் தினத்தன்று இலவசமாக சீகிரியாவைப் பார்வையிட வருகை தந்திருந்த 4000 தேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு மேலதிகமாக 200 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்ததாக சீகிரிய அபிவிருத்தி முகாமையாளர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (18) முதல் இன்றைய அரசாங்க விடுமுறை தினம் (20) வரை, தேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக சீகிரியாவைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக சீகிரிய அபிவிருத்திப் பிரிவின் முகாமையாளர் மேஜர் அநுர நிஸாந்த மேலும் குறிப்பிட்டார்.
(தம்புள்ள தினகரன் நிருபர் - பி. மொஹம்மட் அன்வர்)
from tkn