பெங்களுர் அணி ஆறுதல் வெற்றி

ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டியில் பெங்களுர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

பிளே–ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த கோஹ்லி தலைமையிலான பெங்களுர் அணி, கடந்த சனிக்கிழமை தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பெங்களுர் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு விருத்திமன் சஹா 20 ஓட்டங்களிலும், கப்டில் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அதிரடி காட்டினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விஜய் ஷங்கர் 18 பந்துகளில் 3 சிக்சர்கள் விளாசி 27 ஓட்டங்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி வரை களத்தில் இருந்த வில்லியம்சன் 43 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் பெங்களுர் அணி களமிறங்கியது. ஆரம்ப வீரர்களான கோஹ்லி (16), பார்த்தீவ் படேல் (0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த டி வில்லியர்ஸ் ஒரு ஓட்டத்தில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹெட்மையர் மற்றும் குர்கீரத் சிங் மன் இருவரும் அதிரடியில் இறங்கினர். சிக்சர் பவுண்டரிகளாக விளாசிய ஹெட்மையர் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினர்.

அவரைத் தொடர்ந்து, குர்கீரத் 48 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களுர் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.

ஆனால், 8ஆவது தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு சிக்கலாகிவிட்டது.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை