பதுக்கி வைத்திருந்த மதுபானத்துடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும், விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வெளி மாகாணங்களுக்கான பேரூந்து தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள கட்டிடத்திலிருந்து நேற்று (17) பிற்பகல் விசேட அதிரடிப் படையினரால் இவை கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கட்டிடத்தை சோதனையிட்டபோது, இவை கைப்பற்றப்பட்டன.

மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டதாகவும், விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். 

வெசாக் பண்டிகையையிட்டு, நாடளாவிய ரீதியிலுள்ள மதுபான சாலைகளை நேற்று (17) முதல் 20 ஆம் திகதி வரை 4நாட்களுக்கு மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மயூரப்பிரியன் -யாழ். விசேட நிருபர்)

Sat, 05/18/2019 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை