அமைச்சர் சம்பிக்கவினால் அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளுக்கு கையளிப்பு
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் உலகத்திற்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் உட்பட எதிர்க்கட்சித் தலைவரையும் உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு சபையொன்றை உருவாக்க வேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகள் கொண்ட மகஜர் ஒன்றையும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களிடம் நேற்று முன்தினம் (27) கையளித்தார்.
பலமான சிவில் பொதுமக்கள் அமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 'தேசிய வழி'எனும் பாதையின் ஊடாக நாட்டை பாதுகாக்கவும் மற்றும் நாட்டை கட்டியெழுப்பவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர், இந்த தேசிய வழி ஊடாக தேசிய பாதுகாப்பு, சட்டம் , ஒழுங்கு, அமைதி என்பனவற்றை பாதுகாக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும் வகையில் குறித்த ஏழு அம்ச கோரிக்கை கள் கொண்ட மகஜர் கையளிக்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றவர்களுக்கும் மற்றும் சர்வமத தலைவர்கள் போன்ற அனைத்து அமைப்பினருக்கும் எமது கோரிக்கை மற்றும் ஆலோசனை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு அவர்களினது விருப்பத்தினை பெறவுள்ளோம். அந்த வகையில் முதலில் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான, பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோர் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை பொறுப்புடன் பயன்படுத்தி இவ்வாறான தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களை திட்டமிடும் நபர்களை செயல் இழக்கச் செய்தல் வேண்டும்.
சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்புகள் அவற்றிக்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் சர்வதேச பயங்கரவாதிகளுடனான கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்களை உடனடியாக தடை செய்தல் அத்துடன் வன்முறையின் பால் மக்களை தூண்டி வெறுக்கத்தக்க உரைகளை நிறுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சகல இன மத மற்றும் கொள்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகள் இருந்தால் அதனையும் செயலிழக்கச் செய்தல் வேண்டும்.
மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் உலகத்திற்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு சபையொன்றை உருவாக்குல், வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவுகள் தகவல் சேவைகளுடன் தொடர்ச்சியான உறவை பேணி வருவதோடு எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் இறைமையை மீறும் பாதுகாப்புச் செயற்பாடுகளில் தலையீடு செய்யாதிருக்க அரசாங்கமும் பாதுகாப்புச்சபையும் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளவர்களின் சகல நேரடி மற்றும் மறைமுக வங்கிக்கணக்குகள் அசையா அசையும் சொத்துக்கள் என்பவற்றை அடையாளம்கண்டு, அரசுடமையாக்குதல்
மேலும் மிகச் சிறிய அடிப்படைவாதக்குழுவை செயல் இழக்க செய்யும் கூடுதல் பொறுப்பை சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் சமூகமும் ஏற்கும் நிலையில் அடிப்படை வாதிகள் தொடர்பான சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்குவதற்காக முறையான திட்டமொன்றை தயாரிப்பது சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் தலைவர்களின் ஒதுக்க முடியாத பொறுப்பாக வகுத்தல் போன்ற தலைப்புக்களில் அந்த ஆறு அம்ச கோரிக்கைகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
(எம்.ஏ.அமீனுல்லா)
from tkn