மோசடி மருத்துவரால் பாகிஸ்தானில் 400 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு

அசுத்தமான ஊசிகளை பயன்படுத்தி பாகிஸ்தானில் 500க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பை ஏற்படுத்திய மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லர்கானா மாகாணத்தில் சுகாதார அதிகாரிகள் கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டு 14,000க்கும் அதிமானோரை சோதனை செய்தனர். இதன்மூலம் 400க்கும் அதிகமான சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைய இரத்தச் சோதனைகளில் மேலும் 29 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டதின் பிராந்திய இணைப்பாளர் டொக்டர் சிகந்தர் மெமோன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஊசியை தொடர்ச்சியாகப் பயன்படுத்திய மருத்துவர் ஒருவரே இந்த நோய்த் தொற்றுக்குக் காரணம் என்று அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் முசப்பர் கங்காரே என்ற அந்த மருத்துவர் கடந்த ஏப்ரலில் இந்த விடயம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து வருகிறார்.

பல பெற்றோர்கள், சோதனை அறைகளுக்கு வெளியே சோகம் படிந்த முகங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். பலருக்கு, ஏற்கனவே தங்கள் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

தனது ஒரு வயதுக் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்திருக்கும் முக்தர் பர்வேஸ், “இதை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு நான் சாபம் கொடுக்கிறேன்” என்று புலம்புகிறார்.

இமாம் சைதி என்ற இன்னொரு தாய், தனது 5 குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய வரிசையில் காத்திருந்தார். “எல்லோரும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம்” என்று மாத்திரம் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிய அளவில் அதிக எச்.ஐ.வி நோயாளிகளை கொண்டுள்ள இரண்டாவது நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது. பாகிஸ்தானின் அதிகரிக்கும் மக்கள் தொகையும், மிகவும் குறைவான உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறை வசதிகளும் நோயின் தாக்கத்தை மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

பல துறை சார்ந்த வல்லுநர்கள், போலி மருத்துவர்களால்தான் எச்.ஐ.வி தொற்று வேகமாக பரவி வருகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

சில அரசு தரவுகள், பாகிஸ்தானில் சுமார் 6,000,00 போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் சிந்த் மாகாணத்தில் மட்டும் 270,000 போலி மருத்துவர்கள் உள்ளார்கள் என்றும் ஐ.நா. எய்ட்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை