மாங்குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு நட்டஈடு

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாங்குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10,000 ரூபா பெறுமதியான காசோலைகள் நேற்று (24) வழங்கி வைக்கப்பட்டன.

மாங்குளத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி வீசிய புயலால்  22வீடுகள் சேதமுற்றிருந்தன.

இந்த சேத விபரங்கள் தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டு சென்றதை அடுத்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின்  உதவிப் பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் குறித்த வீடுகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை மதிப்பிட்டனர். இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் மாவட்ட செயலாளரின்  கவனத்திற்கும் அவர்கள் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாங்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து முதற்கட்டமாக  தலா 10,000ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

இழப்புகள் கணக்கிடப்பட்டு மீதி நிதி வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

(சண்முகம் தவசீலன் -மாங்குளம் குரூப் நிருபர்)

Sat, 05/25/2019 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை