வடக்கில் வெடி மருந்துகள், ஆயுதங்களுடன் 20 வாகனங்கள்

தெற்கிலிருந்து சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பு உஷார்

நாட்டின் தென் பகுதியிலிருந்து வெடி மருந்துகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்களை ஏற்றிய 20 வாகனங்கள் வடக்கிற்கு வந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கமைய வடக்கில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி வவுனியாவில் நான்கு வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த பாதுகாப்பு தடைகள் நான்கும் இரவு பகலாக செயற்படுவதோடு வவுனியா நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான 20 வாகனங்களின் இலக்கங்களும் தகவல்களும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு அரண்களின் அந்த வாகன இலங்கங்களின் ஆவணங்களை ஒப்பிட்டு சோதனை நடத்தப்படுகின்றது.

இவ் வாகனங்களில் 12 மோட்டார் சைக்கிள்கள் ஒரு முச்சக்கர வண்டி, இரண்டு வான்கள், பட்டா லொறியொன்றும் இரண்டு கார்கள், இரண்டு கப் வாகனங்களும் அடங்குகின்றன. வட மாகாணத்திற்கு நுழையும் ஏ9 பாதையில் வவுனியாவின் நுழைவாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடியில் இந்த இலக்கங்களைக் கொண்ட போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் ஹொறவ்பத்தான பாதை தாண்டிக்குளம், இரட்டை பெரியகுளம் என்னும் இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தவிர வட மாகாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகங்களும் சோதனையிடப்பட்டு அவற்றைப் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வன்னி பாதுகாப்புப் படை தலைமையக இராணுவ வீரர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 வவுனியா விசேட நிருபர்

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை