இடாய் சூறாவளி காரணமாக மத்திய மொசாம்பிக்கில் வெள்ளத்தில் இருந்து தப்பி, மாமரத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.
அமெலியா தனியாக வாழ்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது தனது இரண்டு வயது மகனுடன் மாமரத்தின் கிளை ஒன்றை பற்றிக்கொண்டார். அந்தக் கிளை மீதே தனது பெண் குழந்தை சாராவை ஈன்றெடுத்தார்.
இரண்டு நாட்கள் கழித்து அக்கம்பக்கத்தினர் அக்குடும்பத்தை மீட்டது. இந்த சூறாவளியில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போன்றதொரு அதிசயத்தக்க நிகழ்வு 20 ஆண்டுகளுக்கு முன் தெற்கு மொசாம்பிக்கில் நடந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய பெண் ஒருவர் ஒரு மரத்தில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.
“நான் என்னுடைய இரண்டு வயது மகனுடன் வீட்டில் இருந்தேன், எந்தவித எச்சரிக்கையும் விடப்படாத நிலையில் தண்ணீர் எங்கள் வீட்டுக்குள் புகுந்தது. எனக்கு வேறு வாய்ப்புகளே இல்லை. அதனால் மரத்தில் ஏறிவிட்டேன். அங்கே எனது மகனுடன் தனியாக இருந்தேன்” என ஐ.நாவின் குழந்தைகள் முகமையான யுனிசெப்பிடம் அமெலியா தெரிவித்துள்ளார்.
from tkn