சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கவும்

பொது மக்களிடம் அரச அதிபர் வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களையோ அல்லது மர்ம பொதிகளையோ கண்டால் அருகில் உள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு யாழ்ப்பான மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடர்ந்து யாழ்ப்பான மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருடன் நேற்று அவசர கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துைரயாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். இது தொடர்பாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பல பாகங்களிலும் கடந்த 21 ஆம் திகதி தொடர் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றன.

அந்த சம்பவத்தினால் பலர் உயிரிழந்ததுடன் ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். சம்பவம் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. குறித்த வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாம் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர்,பொலிஸார், பிரதேச செயலர்கள் போன்றவர்களை அழைத்து பேசினோம். குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே பாடசாலைகளின் பாதுகாப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன.

அத்துடன் யாழ் நகரில் இயங்கும் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களும் பாடசாலைகள் இயங்கும் வரை வகுப்புக்களை நிறுத்தி எமக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்தாலோ மர்ம பொருட்களை கண்டாலோ உடனடியாக அருகில் பாதுகாப்பு தரப்பினருக்கோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பருத்தித்துறை விசேட நிரூபர்

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை