சம்பவங்களின் பின்னணியை கண்டறிவதில் அரசு துரிதம்

வதந்திகளை நம்பாது அமைதி காக்கவும்

நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள துன்பியல் சம்பவத்தையிட்டு மிகவும் வேதனையடைவதுடன் நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

(தொடர்)

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உட்பட நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்றுக் காலை குண்டு வெடிப்புகள் இடம் பெற்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே, ஏனைய மதத் தலைவர்களே,அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே,நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன். அதேவேளை, இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்பாராத இச்சம்பவத்தால் என்னைப் போன்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளதை நான் அறிவேன்.

இச் சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதை ஆராய்வதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப் படையினர், இராணுவம், வான்படை, கடற்படை, உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக துரித விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.

இச் சம்பவத்தையிட்டு ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பின்னணியில் அனைவரினதும் ஒத்துழைப்பே மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. எவரும் வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம். அத்தோடு நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை