நடிகர் ரயனுக்கு மீண்டும் விளக்கமறியல்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுக்ஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வென் ரோயனுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நடிகர் ரயன் வென் ரோயன் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ரயன் வென் ரோயன் உள்ளிட்ட 5பேர் துபாயிலிருந்து, இலங்கைக்கு கடந்த 04ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் 18மணித்தியாலம் விசாரணை செய்திருந்தனர்.

இதன் பின்னர், நடிகர் ரயன் வென் ரோயன் கஞ்சா வைத்திருந்தமை உள்ளிட்ட விசாரணைக்காக வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்  நடிகர் ரயன்  ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் இசுர நெத்திகுமாரவினால் இன்றுவரை (11) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரை மீண்டும் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

கடந்த பெப்ரவரி 09ஆம் திகதி ரயனின் காரிலிருந்து 5.75கிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, நடிகர் ரயன் வென் ரோயன் தவிர்ந்த, ஏனைய நால்வரும் விசாரணையை அடுத்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

Thu, 04/11/2019 - 12:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை