நான்கு மாற்றுத் திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட 4 மாற்றுத் திட்டங்களையும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் அதனுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வது, இரண்டாவது முறையாகப் பொது வாக்கெடுப்பு நடத்துவது, உடன்படிக்கையின்றி வெளியேறுவதைத் தவிர்க்க பிரெக்சிட்டை நிறுத்திவைப்பது போன்ற பரிந்துரைகளுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைக்கவில்லை.

அந்த வாக்களிப்பின் முடிவுகள் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், பாராளுமன்றத்தின் விருப்பத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பிரிட்டனின் நீதித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மே முன்வைத்த உடன்படிக்கையை ஏற்கனவே 3 முறை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஏதுவான ஒப்பந்தம் தொடர்பில் வாக்களித்தனர்.

அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பேசிய பிரெக்சிட் அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே, இம்மாதம் 12ஆம் திகதி உடன்படிக்கை ஏதுமின்றி ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான சாத்தியம் இருப்பதாய்க் கூறினார்.

இதனிடையே பிரெக்சிட் உடன்படிக்கை ஒன்று இடம்பெறாமல் இருக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனைத் தவிர்க்க இன்னும் முடியும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ஏப்ரல் 12 திகதியை நீடிப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்த அவர் ஐரோப்பிய ஒன்றியம் அதனை ஏற்பதற்கு வலுவாக நியாயம் வழக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை