5 முதல் வழமை
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நிறுத்தப்பட்டிருந்த திருப்பலி பூஜைகளை மீண்டும் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் உதவிகளைப் பெற்று பூஜைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் கொழும்பு புஞ்சிபொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,
சில தேவாலயங்களில் நாளொன்றிற்குப் பல திருப்பலிப் பூசைகள் இடம்பெறுகின்றன. எனினும், இக்காலங்களில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பூஜைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்காக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு கோரியுள்ளோம். பொலிஸாரின் பாதுகாப்பை பெற்றுக்கொண்டு பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதே எமது நோக்கம்.
அதேவேளை, ஆலயங்களில் சுயாதீன குழுக்களை நியமித்து ஆலயங்களுக்கு வரும் அனைவரையும் இனங்காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவ்வேளைகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பார்சல்கள் போன்ற பொருட்களை கண்டால் அதுதொடர்பில் அக்குழுவினர் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் திருப்பலிப் பூஜைகளில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் எந்தவொரு பொதியையோ அல்லது பைகளையோ ஆலயத்துள் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
from tkn