நாடொன்றின் அபிவிருத்திக்கு புத்தாக்கங்களே பாரிய பங்களிப்பு

எண்ணெய் கண்டுபிடிப்பைவிடவும் இதுவே முக்கியம் என்கிறார் சுஜீவ

இன்றைய காலகட்டத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டுபிடிப்பதை விடவும் நாடொன்றின் அபிவிருத்திக்கு புத்தாக்கங்களே பாரிய பங்களிப்பு செய்யக்கூடியனவாக விளங்குவதாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராயச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க நேற்று தெரிவித்தார்.

இந்நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் புத்தாக்கங்கள் அதிக பங்களிப்பை அளிக்க முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர்,

விஞ்ஞானத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்க்கப்படவிருக்கும் 'சில்பசேனா' திட்டத்தின் ஊடாக ஐநூறு புத்தாகுனர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, லேக் கவுஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும் 'அறிவியல் ' இணைப்பு பத்திரிகையின் மூன்றான்று நிறைவு வைபவம் லேக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் 'அறிவியல்' இணைப்பு பத்திரிகையின் மூன்றாண்டு நிறைவு மலரின் சிங்கள மொழி பத்திரிகையை அதன் ஆசிரியர் ரந்தலி பபசராவும், தமிழ் மொழி பத்திரிகையை தினகரன் இணையாசிரியர் மர்லின் மரிக்காரும் அரச தொடர்புகள் பிரிவின் முகாமைத்துவ ஆசிரியர் சமந்த கருணாசேகரவுடன் இணைந்து லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிரிஷாந்த குரேவிடம் கையளிக்க, அப்பிரதிகளை அவர், அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்து வெளியிட்டு வைத்தார். மூன்று மொழிகளில் வெளியிடப்படும் இப்பத்திரிகையின் இணையப் பதிப்பும் அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

கடந்த மூன்றாண்டுகளாக இப்பத்திரிகைக்கு ஆக்கங்கள் உட்பட பல்வேறு வழிகளில் உதவி ஒத்துழைப்புகளை நல்கிய உத்தியோகத்தர்களுக்கு இவ்வைபவத்தின் போது சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இவ்வைபவத்தில் அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ். லொக்குஹெட்டி, லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிரிஷாந்த குரே, ஆசிரியர் பீடப் பணிப்பாளர் லலித் அழகக்கோன், பொதுமுகாமையாளர் அபே அமரதாச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை