சாதாரண நீதிமன்றங்களின் வாசற்படியை கூட பிக்குமார் மிதிப்பதை நான் விரும்பவில்லை

பிக்குமார்களுக்கு தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

உன்னதமான புனிதம் மிக்க பெளத்த மத போதகர்களான பிக்குமார்களை சாதாரண நீதிமன்றத்தின் வாசற்படியைக் கூட மிதிக்க வைக்க நான் விரும்பவில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இரத்தினபுரி போதிராஜாராமய விகாரையின் நான்கு மாடிக் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மகாநாயக்கர்களிடம் ஆசிபெற சென்ற போது பிக்குகளுக்கு தனியாக நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

சாதாரண நீதிமன்றங்களில் பௌத்த பிக்குமார் ஆஜராவதற்கு தனியான ஒரு தினத்தை ஒதுக்கிக்கொடுக்குமாறு கேட்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மத்திய, வடமேல் மாகாணங்களில் தனியான ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல ஏனைய மாகாணங்களிலும் அதற்குரிய ஒழுங்குகளை செய்து கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை