மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் போட்டியிட்டன. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஓட்டம் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ஓட்டங்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

கிறிஸ் லின் 54 ஓட்டங்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) பிடி ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் தலைவரின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த சகல துறை வீரர் ஆந்த்ரே ரஸ்சல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ஓட்டங்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.

அடுத்து தலைவர் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்சல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பந்துவீச்சாளர்கள் திண்டாடினர். ஆப்-சைட்டுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்கவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான துடுப்பாட்டத்தால் கொல்கத்தா அணி மலைப்பான ஓட்டவேகத்தை எட்டிப்பிடித்தது.

20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் குவித்தது. இந்த பருவகாலத்தில் ஒரு அணியின் அதிகபட்சமான ஓட்ட எண்ணிக்கை இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ஓட்டங்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து 233 ஓட்டங்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), தலைவர் ரோகித் சர்மா (12 ஓட்டங்கள்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த பருவகாலத்தில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.

ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ஓட்டத்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ஓட்டங்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) பிடி ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

தொடர்ச்சியாக 6 ஓட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.

கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.- இல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பந்துவீச்சாளர் ஆவார்

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை