எகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு

எகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

எகிப்தில் ஜனாதிபதி அல் சிசியின் ஆட்சிக் காலத்தை நீடிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அல் சிசியின் ஆட்சி தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்த கேள்விக்கு தீர்வு காணும் வகையில் அந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை ஆரம்பமானது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் திராளானோர் கலந்து கொண்டு தங்களது விருப்பங்களை வாக்குச்சீட்டின் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாக்கெடுப்புக்கு எகிப்தின் மனித உரிமைகள் அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பொதுவாக்கெடுப்பின் மூலமாக மக்கள், அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு தங்களது முழு ஒப்புதலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அல் சிசியின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொந்தளிப்பு நிறைந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள எகிப்து, அரபு பிராந்தியத்தில் மிகப்பெரிய நாடாக உள்ளது. அங்கு ஸ்திரத்தன்மையான ஆட்சியைக் கொடுக்கும் வகையில் அல் சிசி செயல்படுவார் என்ற நம்பிக்கை பெரும்பான்மையான மக்களிடையே உள்ளது. அப்படி மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அல் சிசியின் ஆட்சியானது அடுத்த ஆறு ஆண்டு காலத்துக்கு தொடரும்.

அப்போது நீதித் துறையில் தனது கட்டுப்பாட்டை மேலும் அதிகரிப்பதுடன், அரசியல் வாழ்க்கையில் இராணுவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை