போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று காணப்படுவதாக தெரிவித்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் 25 ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் விகும் களுஆரச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி ஆகிய இரு தரப்பும் சமரச உடன்பாட்டை எட்டியதை அடுத்து, குறித்த வழக்கை மற்றும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்றைய தினம் (24) இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை குறித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.
இதன்போது, போலி ஆவணம் வெளியிட்டமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அசௌகரியம் ஏற்பட்டிருப்பின், அது தொடர்பில் தாம் வருந்துவதாக தெரிவித்த, திஸ்ஸ அத்தநாயக்க அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.
இவற்றை கருத்திற்கொண்ட நீதவான், அதன் அடிப்படையில் குறித்த வழக்கை தொடர்ந்தும் கொண்டு நடாத்து அவசியமில்லை என, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn