மேலைத்தேயத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை

மத அடிப்படைவாதத்தை அரசு மறைத்தது ஏன்?

யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைத்தேய நாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 1997ஆம் ஆண்டு முதல் பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிரவும் சர்வதேச நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மேலைத்தேய நாடுகள் உலகம் முழுவதிலும் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன. இலங்கையிலும் அவர்களின் இந்த நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிரியாவில் அரசியல் ரீதியான குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவினாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்பொழுது இலங்கையில் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்தது முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் போன்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவுமே செயற்பட்டனர். அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் அரசியலிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரும் அவர்களின் செயற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. எவரும் பொறுப்பெடுக்காமல் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதே காணப்படுகிறது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல்களும் முன்பின் முரணானவையாகக் காணப்படுகின்றன. பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதி மீண்டும் அப்பதவியில் இருப்பதற்கு கனவு காண்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னால் நெருங்கமுடியாமிலிருக்கும் ஜனாதிபதி ஆசனத்தை நெருங்குவதற்கு கனவு காண்கின்றார். இவர்கள் கனவிலிருந்து விழிக்கும்போது நாடு ஸ்திரமற்ற மோசமான நிலைக்குச் சென்றுள்ளதுடன், நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் உச்சம்பெற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றுவிட்டது. சுமார் 10 முதல் 12 வருடங்களாக இதற்கான ஆரம்பத்தை பயங்கரவாதிகள் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற அடிப்படைவாத அமைப்பு நாட்டில் செயற்படுகிறது என்பது தெரிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. சர்வதேச நாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அமைப்பில் பயிற்சிபெற்று நாடு திரும்பியவர்களை தடுப்பதற்கு சட்டம் இன்னமும் இல்லையென பிரதமர் கூறியுள்ளார். அவ்வாறு சட்டமொன்று இல்லாவிட்டால் அதனை பாராளுமன்றத்தில் இயற்றவேண்டிய கடப்பாடு பிரதமருக்கு உள்ளது.

இலங்கையில் மதரீதியான அடிப்படைவாதம் இருக்குமாயின் அதனை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவற்றை இல்லாமல் செய்வதற்கான கட்டளைகளை அரசாங்கம் உரிய தரப்பினருக்கு வழங்கியிருக்க வேண்டும். யாருக்காவது தண்டனை வழங்க வேண்டுமாயின் சட்டப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கமாட்டார்கள். உடனடியாக பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள்.

பிரதமர் மாத்திரமன்றி ஜனாதிபதி மைத்திரிபாலவும் பொறுப்பேற்க வேண்டும். தாக்குதல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாகவே தெரிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை பறைசாற்றுகிறது என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை