நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றும் ஊரடங்கு இல்லை
கிழக்கு மாகாணத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று (29) மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (29) மாலை 6.00 மணியிலிருந்து நாளை முற்பகல் 8.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, நாடு முழுவதும் இரவு வேளையில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதோடு, இன்றைய தினமும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது, வொலிவேரியன் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (26) ஸஹ்ரானின் சகோதரர்கள் இருவர் மற்றும் அவரது தந்தை ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்த தாக்குதல்களை அடுத்து, அங்கு தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்ததோடு, நேற்று (28) முற்பகல் 10.00 மணியளவில் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக பாதுகாப்பு பிரிவினால் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn