600 கி.மீ தூரத்தை 08 மணித்தியாலத்தில் பறந்து புறா சாதனை

தெற்கில் இருந்து வடக்கு வரையில் பந்தய புறாக்கள் பறந்து சாதனை படைத்துள்ளன.

மாத்தறை கந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் புறா பந்தய போட்டி நடத்தப்பட்டது. யாழ். பந்தய புறாக்கள் கழகம் (பபுகயா) கடந்த இரண்டு வருடகாலமாக புறா பந்தய போட்டிகளை நடாத்தி வருகின்றது. அந்நிலையில் இலங்கையின் மிகத் தூரப் போட்டியான 'ட்ராகன் மவுத்' போட்டி யாழ்ப்பாணத்தில் பிரபல மகப்பேற்று மருத்துவ நிபுணரான கே. சுரேஷ்குமாரின் அனுசரணையுடன் ஞாயிற்றுக்கிழமை (07) நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து, தரைவழிப் பாதையாக சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள 'ட்ராகன் மவுத்' என்னும் பகுதிக்கு 100 பந்தய புறாக்கள் கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து விடுவிக்கப்பட்டதும் அவை யாழ்ப்பாணத்தை நோக்கி பறக்க தொடங்கின.

அங்கிருந்து 400 கிலோ மீற்றர் வான் தூரத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை எட்டரை மணி நேரத்தில் வந்தடைந்து முதல் புறா சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய புறாக்களும் வந்து சேர்ந்தன.

குறித்த போட்டியில் முதலிடத்தை பிடித்த புறாவுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசிலும், பதக்கம் மற்றும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் , இரண்டாம் இடத்திற்கு 75ஆயிரம் ரூபாய் பணப் பரிசிலும், மூன்றாம் இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும் மற்றும் பத்தாம் இடத்திற்குள் வந்த ஏனைய 7 புறாக்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் பணப் பரிசிலும் வழங்கப்படவுள்ளதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை