குண்டு வெடிப்புக்களில் 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை வேதனையளிக்கிறது

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) கவலை தெரிவித்துள்ளது.  

மேற்படி சம்பவங்களில் இலங்கையர் மற்றும் வெளிநாட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் இன்னும் தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பல சிறுவர்கள் தமது பெற்றோர்களில் ஒருவரை அல்லது இருவரையுமே இழந்துள்ளனர்.  

 பல சிறுவர்கள் அதிர்ச்சியூட்டும் மற்றும் அறிவின்றி மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு சாட்சியாகியுள்ளனர் என்றும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

இதேநேரம் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக நம்பிக்கை மிகுந்த தகவல்களை பெற்றுக்கொள்ள யுனிசெப் அமைப்பு அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படுகிறது. அத்துடன் இதுவரை யுனிசெப் கீழ்க்காணும் தேவைகளை இனங்கண்டுள்ளது.  

சிறுவர்கள் சிகிச்சை பெற்றுவரும் சில வைத்தியசாலைகளில் அவசியமான மருந்துகள் தேவைப்படுகின்றன. எனவே இவ்வாறான மருந்துகளை பெற்றுக்கொள்ளவும் வழங்கவும் யுனிசெப் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதேநேரம் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு நிரந்தர அடைக்கலம் தேவையாக உள்ளது. சிறுவர்களை பராமரிக்க தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க யுனிசெப் நடவடிக்கை எடுத்துள்ளது.  

சிறுவர்களுக்கு உளவியல்- சமூக ஆதரவு பிரதான தேவை என்று இனங்காணப்பட்டுள்ளது. எனவே சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உளவியல்- சமூக முதலுதவியை யுனிசெப் வழங்கி வருகிறது.  

அதேநேரம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தொடர்பான தரவுகளை சேகரிக்கவும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு உதவி ஒத்தாசையை யுனிசெப் தொடர்ந்தும் வழங்கி வருகிறது என யுனிசெப் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.    

Wed, 04/24/2019 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை