கட்டுநாயக்க விமான நிலையம் வந்த நான்கு விமானங்கள், சீரற்ற காலநிலை காரணமாக மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இன்று (17) பிற்பகல் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான 3 விமானங்களும் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றுமே மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டதாக, மத்தளை விமான நிலையத்தின் முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்தார்.
ஜகார்த்தா, சிங்கப்பூர், கோலாலம்பூரிலிருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவை விமானங்களான UL365, UL303, UL315 மற்றும் டோஹாவிலிருந்து வந்த கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR654 எனும் விமானங்களே இவ்வாறு மத்தளை விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
அடை மழை காரணமாக, குறித்த சந்தர்ப்பத்தில் விமான நிலைய ஓடுபாதை சரியாக புலப்படாமை காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பதில் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானங்களில் இருந்து பயணிகள் தரையிறக்கப்படாதுள்ளதாகவும், பிற்பகல் 5.45 மணியளவில் விமானங்கள் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக மத்தளை விமான நிலையத்தின் முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்ததோடு, காலநிலை சீரானதாக மாறியதும் குறித்த விமானங்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.
from tkn