24 மணிநேரத்தினுள் பாதுகாப்பு உயர் பதவிகளில் மாற்றம்

முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம்

சர்வகட்சிகளுடன் வட்டமேசை மாநாடு நடத்தி அடுத்த கட்ட நடவடிக்ைக

24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் பதவிகளில் திடீர் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

அதேபோன்று எதிர்வரும் ஒருவார காலப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பாதுகாப்பு துறைகளும் முற்றாக மறுசீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எமது நாட்டில் உருவாகியுள்ள சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு இதுவரை 7 பலம் வாய்ந்த நாடுகள் பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்த அனுபவத்துடன், சமாதான மற்றும் அமைதியான சூழலை நாட்டில் உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை அடுத்துவரும் நாட்களில் எடுக்கவுள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இத்தகைய நடவடிக்ைககளுக்கு பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் மக்கள் வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். 1980ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது நாட்டில் விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தை ஆரம்பித்த போது இந்நாட்டின் சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகத்தான் பார்த்தனர். ஆனால், பின்னர் தமிழர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை உணர்ந்தனர். சிங்கள மற்றும் தமிழ் மக்களிடம் தாழ்மையுடன் கோருகின்றேன். முஸ்லிம் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சந்தேகமும் அச்சுறுத்தலும் இல்லாது அனைத்து மக்களும் சமாதானமான சூழலில் வாழ்வதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளேன். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் தலைவர்களை வட்டமேசைக்கு அழைத்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன்.

அதேபோன்று பௌத்த, இந்து, கிறிஸ்த மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் வட்டமேசைக்கு அழைத்து கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 48 மணித்தியாலங்களில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் மிகுந்த வேதனைமிக்க மிகவும் துக்ககரமான சம்பவங்கள் நிறைந்த துரதிஸ்டவசமான சந்தர்ப்பம் என்பதை என்னைப் போல் நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் முன் உரை நிகழ்த்தும் இன்றைய தினம் ஒரு தேசிய துக்க தினமாகும்.

துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே அரசு இதனை பிரகடனப்படுத்தியது. நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத இந்த பயங்கரவாத காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இலங்கை அரசு என்ற வகையிலும் இந்த நாட்டு மக்கள் என்ற வகையிலும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும்.

இந்த சம்பவத்தைப் பற்றி இத்தருணத்தில் இந்த நாட்டுக்குள் பல்வேறு கருத்துக்கள், திறனாய்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் விமர்சனங்கள் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன. இது ஒரு சுதந்திரமான ஜனநாயக சமூகத்தின் இயல்பான தன்மை என்றே கருதுகிறேன். உலகிலேயே மிகவும் பயங்கரமான காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் 27 வருடகால மிக கொடூரமான அனுபவங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அக்காலகட்டத்தில் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமை அதன் துன்ப துயரங்கள் பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவற்றைப் பற்றி நான் எடுத்துரைக்கத் தேவையில்லை.

அந்த நீண்ட கால அனுபவங்கள் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்து இப்போதைக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வாறு கடந்த 10 ஆண்டுகள் இந்த நாட்டில் மிக உயரிய சமாதானம் நிலவியது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி முதல் இது வரையிலான நான்கரை வருடங்கள் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் அனுபவித்துவந்த காலம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய பின்னணியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இத் தேசிய துன்பியல் சம்பவத்தை நாம் ஒருபோதும் ஏதிர்பார்க்கவில்லை. ஆகையால் அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் முன் எடுத்துரைப்பதும் ஒழிவு மறைவின்றி அனைத்து விடயங்களையும் இந்த நாட்டு மக்களாகிய உங்கள் முன் வைக்கவேண்டியதும் எனது கடமையும் பொறுப்புமாகும்.

இந்த பயங்கரவாத அமைப்பை பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் எமது பாதுகாப்பு துறைகளுக்கு அறியக் கிடைத்திருந்தது. அதற்கமைய அவ்வமைப்பினர் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருவதாகவும் அறியக் கிடைத்தது. இதனால் எமது பாதுகாப்பு தரப்பினர் இவ்வமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி மோப்பம் பிடித்து தகவல்களைத் திரட்டி வந்தார்கள். இருப்பினும் இவ்வமைப்பை சார்ந்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தகுந்த சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தகவல்களும் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருக்கவில்லை.

கடந்த மூன்று வருடங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூடிய நேரங்களில் எல்லாம் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் மேற்கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து நாம் அறிந்து வைத்திருந்தோம் என்பதைக் கூறவேண்டும்.

இருப்பினும் நாம் ஒருபோதும் எதிர்பாராத நேரத்தில் இவ்வமைப்பு சர்வதேச பயங்கரவாத குழுவொன்றின் ஆலோசனை, வழிகாட்டுதல், தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் ஏற்படுத்திய இந்த மாபெரும் உயிர்ச்சேதத்தினால் வறிய அப்பாவி குடும்பங்களின் பிஞ்சுக் குழந்தைகள் முதல் செல்வந்த குடும்பங்களின் அங்கத்தவர்கள் வரையிலும் இந்த நாட்டுக்கு வருகைத்தந்திருந்த உல்லாச பிரயாணிகள் வர்த்தகர்களும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள். இவ்வனைவருக்காகவும் மீண்டும் இந்நாட்டு மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சோதனையும் வேதனையும் நிறைந்த இச்சந்தர்ப்பத்தில் நமது நாட்டின் குடிமக்களாகிய எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ மதத்தினர் வெளிப்படுத்திய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் பற்றி நான் இங்கு நிச்சயம் குறிப்பிட வேண்டும் மதிப்பிற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மக்களும் மதகுருமார்களும் இந்த நாட்டினுள் மோதல்கள் ஏற்படாதவகையில் அமைதியான முறையில் மக்களை வழிநடத்தியதையிட்டும் மக்களை வழிநடத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மிகுந்த பொறுமையுடனும் செயற்பட்டதற்காகவும் இத்தருணத்தில் இந்த கிறிஸ்தவ மக்கள் சமூகத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன். இப்போது இந்த சம்பவத்தின் பின்னர் நாட்டு மக்கள் என்ற வகையில் எம்முன் இருப்பது இந்த துயரத்திலும் அழிவிலுமிருந்து எவ்வாறு மீள் எழுவது என்ற செயற்பாடே ஆகும். அச்செயற்பாட்டின் போது எமது பாதுகாப்புத் துறை பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளின் கட்டமைப்பில் முழுமையான ஒரு மறுசீரமைப்பினை ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு துறை தலைமைகளில் மாற்றங்களையும் ஏற்படுத்தவுள்ளேன். இந்த சம்பவம் நிகழ்ந்த கணம் முதல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களினதும் உயிரிழந்தவர்களினதும் துன்பங்ளையும் துயரங்களையும் புரிந்து கொண்டு சமயோசிதமான முறையில் பொலிஸாரும் பாதுகாப்புத் துறையினரும் செயற்பட்டதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றேன்.

இங்கு நான் உங்களுக்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ அமைப்பு ஆரம்பமான 80களில் இந்த நாட்டின் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் இந்த நாட்டின் அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாகவே நோக்கினர்.

ஆயினும் காலப்போக்கில் எல்லா தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகையினாலேயே இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது. ஆகையால் இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களிடமும் தமிழ் மக்களிடமும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல என்பதை மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது மிகச் சிலரே. ஆகையினால் நாட்டினுள் சிங்கள முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கைத்தையும் பேணிப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக அமைவதுடன் அனைவர் மீதும் நம்பிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அவசரகால சட்டதிட்டங்களை வர்த்தமானியில் வெளியிட நேர்ந்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இந்த அவசர கால சட்டங்களை அறிவிக்காது இருப்பின் குறிப்பாக பொலிசாருக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்கள் போதுமானதாக அமையாததுடன் பாதுகாப்பு செயற்பாடுகளில் தரைப்படை வான்படை கடற்படை ஆகிய முப்படைகளை உள்வாங்க இயலாது போய்விடும்.

அந்த நிலைமையை சமாளித்து முப்படையினருக்கு தேவையான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பதற்காகவே குறிப்பாக அவசரகால சட்டதிட்டங்களுடன் பயங்கரவாத தடை சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் எவ்விதத்திலும் நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்துவதற்காகவோ எவருக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் வகையிலோ சுதந்திரமான இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக அமையும் விதத்திலும் இந்த சட்ட திட்டங்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்ற பொறுப்பை தனிப்பட்ட வகையில் நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாட்டின் பேச்சு சுதந்திரம், ஊர்வலங்கள் செல்வதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான ஊடக சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இச்சட்ட திட்டங்கள் எவ்விதத்திலும் எவருக்கும் இடையூறாகவோ சவாலாகவோ அமையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

அத்தோடு இத்தருணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த நேரம் முதல் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவரும் முப்படைகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் செயற்திறன் புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவுகளின் மிகுந்த அர்ப்பணிப்பை பற்றி மீண்டும் மீண்டும் பாராட்டுவதுடன் இப்புலனாய்வு பணிகளின் போது உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் இங்கு நான் மதிப்புடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஏற்கனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சந்தேக நபர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு பெருமளவு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் மீண்டும் இவ்வாறான மனம் வருந்த்த்தக்க துன்பியல் சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதையும் இங்கு நான் கூற வேண்டும்.

(முதலாம் பக்கத் தொடர்)

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை