இலங்கை அணி நாளை கட்டார் பயணம்; 15 பேர் கொண்ட அணி பங்கேற்பு

கட்டாரில் உள்ள கலீபா விளையாட்டரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நாளை (19) கட்டார் நோக்கிப் பயணமாகவுள்ளது.

இம்முறை நடைபெறுகின்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 8 வீரர்களும், 7 வீராங்கனைகளும் உள்ளடங்கலாக 15 பேர் கொண்ட அணியொன்று பங்கேற்கவுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனும்,அதேபோட்டியில் ஆசியமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனுமான நிமாலி லியனாராச்சி இம்முறை இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறார்.

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளில் 9 வீரர்கள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவு மட்டத்தினை பூர்த்தி செய்திருந்ததுடன்,மேலும் 6 பேர் அந்த அடைவு மட்டத்தினை அண்மித்து இருந்தனர்.

குறித்த தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கன 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான்,கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் புதிய இலங்கை சாதனை படைத்தார். குறித்தபோட்டியை 10.22 செக்கன்களில் நிறைவு செய்த அவர்,மீண்டும் தெற்காசியாவின் அதிவேக வீரராகவும் மாறினார்.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட கலீபா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 41 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இறுதியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 41 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 560 வீர,வீராங்கனைகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த தொடரில் இலங்கை ஒருதங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தன. இதில் பெண்களுக்கான 800 மீற்றரில் நிமாலி லியனாராச்சி தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள,கயன்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல,பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ருமேஷிகா ரத்னாயக்க,பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தில்ஹானி லேகம்கே மற்றும் ஆண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணியும் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டன.

இம்முறைப் போட்டித் தொடரில் நிமாலி லியனாராச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகிய இருவரும் மாத்திரமேஇலங்கைசார்பாக போட்டியிடுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசியமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வரலாற்றில் இலங்கை அணி இதுவரை 19 தங்கம், 14 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 52 பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளது.

எனினும், 22 தடவைகள் நடைபெற்றுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் சீனா (308 தங்கம், 206 வெள்ளி, 113 வெண்கலம்) முதலிடத்தையும், ஜப்பான் (151 தங்கம், 191 வெள்ளி, 212 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. இறுதியாக இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்கள் அணிவிபரம்

ஹிமாஷ ஏஷான் (100 மீற்றர்), சுமேதரணசிங்க (ஈட்டி எறிதல்), ருசிருசத்துரங்க (800 மீற்றர்), தனுஷ்க சந்தருவன் பிரியரத்ன (நீளம் பாய்தல்), ஜனகபிரசாத் விமலசிறி (நீளம் பாய்தல்),கிரேஷன் தனன்ஞய (முப்பாய்ச்சல்), அஜித் பிரேமகுமார (400 மீற்றர்).

பெண்கள் அணிவிபரம்

நதீசா ராமநாயக்க (400 மீற்றர், 4 x 400 அஞ்சலோட்டம்),நிமாலிலியனாரச்சி (800 மீற்றர், 4 x 400 அஞ்சலோட்டம்), கயன்திகாஅபேரத்ன (800 மீற்றர்,4 x 400 அஞ்சலோட்டம்),விதூஷா லக்ஷானி (முப் பாய்ச்சல்),நிலானி ரத்னாயக்க (3000 மீற்றர் தடைதாண்டல்), டில்ஷி குமாரசிங்க (4 x 400 அஞ்சலோட்டம்) உபமாலிகா ரத்னகுமாரி (4 x 400 அஞ்சலோட்டம்)

அதிகாரிகள் விபரம்

லால் சந்திரகுமார (முகாமையாளர்),ஐராங்கனி ரூபசிங்க (பெண் அதிகாரி), சஜித் ஜயலால் (பயிற்சியாளர்),சமிந்த பெரேரா (பயிற்சியாளர்),சன்கரணசிங்க (உடற்கூற்றுநிபுணர்), லால் ஏக்கநாயக்க (வைத்தியர்).

ஏ.ஆர்.பரீத்,பீ.எப் மொஹமட்

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை