பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வென் ரோயனுக்கு எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
ரயன், மாத்தறை நீதவான் இசுர நெத்திகுமார முன்னிலையில் இன்று (05) ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .
கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி ரயனின் காரிலிருந்து பொலிஸாரினால் 5.75 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது. குறித்த கார் ரயனினால் பயன்படுத்தப்பட்டதோடு. அவர் துபாய் செல்ல முன்னர் மிரிஸ்ஸ, வெலிகம பகுதியிலுள்ள விடுதியில் குறித்த காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விடுதி, மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட, சுரனி சுத்தா என அழைக்கப்படும் அமில பிரசங்க ஹெட்டியாராச்சி உடையது என சந்தேகிக்கப்படுகின்றது.
நடிகர் ரயன் வென் ரோயன் உள்ளிட்ட 5 பேர் இலங்கைக்கு நேற்று (()4) காலை துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாலை 5.25 மணியளவில் UL 226 ஶ்ரீலங்கன் விமான சேவைக்குரிய விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் 18 மணித்தியாலம் விசாரணை செய்திருந்தனர்.
இதன் பின்னர், நடிகர் ரயன் வென் ரோயன் கஞ்சா வைத்திருந்தமை உள்ளிட்ட விசாரணைக்காக வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நடிகர் ரயன் வென் ரோயன் தவிர்ந்த, ஏனைய நால்வரும் விசாரணையை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
from tkn