பிள்ளைகள் மீதான தாக்குத​​லை தடுக்க உரிய சட்டம் அவசியம்

பாடசாலைகளில் ஆசிரியர்களாலும், வீடுகளில் பெற்றோர்களாலும் பிள்ளைகள் தாக்கப்படுவது மற்றும் தண்டிக்கப்படுவது ஆகிய குற்றங்களைத் தடுப்பதற்கு உரிய சட்டங்களைக் கொண்டுவருவது அவசியமெனவும் அதற்கான நடவடிக்கைகளை சிறுவர் விவகார அமைச்சு மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

எமது நாட்டிலுள்ள பாடசாலைகளில் 2017ல் 80 வீதமான பிள்ளைகள் ஆசிரியர்களின் தண்டனைக்கு ஆளானதுடன் 53 வீதமான பிள்ளைகள் ஏதோ ஒரு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளானதாகவும் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதை அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.  

3 வீதமான நாடுகளில் ஆசிரியர்களால் பிள்ளைகள் தண்டிக்கப்படுவதற்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், 58வீதமான நாடுகளில் வீட்டில் பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

இது தொடர்பில் கல்வியமைச்சு சில நியதிகளை நடைமுறைப்படுத்தியிருந்தாலும் இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.  

பிள்ளைகள் மிருகங்களல்ல என்றும் அவர்களை உடல் ரீதியாகத் தண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கோ பெற்றோர்களுக்கோ அதிகாரம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.  

பாராளுமன்ற்தில் நேற்று (27)  சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் தொடர்பாக அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கும் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பிமல் ரத்நாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:  குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்களையும் பெற்றோர்களை இழந்து அநாதரவான பிள்ளைகளையும் ஒரே இடத்தில் (சிறுவர் பராமரிப்பு நிலயத்தில்) தங்கவைப்பது முறையற்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கிணங்க சிறுவர் தொடர்பான சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம்.அதேபோன்று சிறுவர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு மாகாணங்கள் தோறும் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது அவசியமாகும்.சிறுவர்களுக்கு எதரான குற்றங்களில் 4வீதமானோரே குற்றவாளியாக் கப்படுகின்றனர். மீதம் 96வீதமானோர் தப்பித்து விடுகின்றனர்.  

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாவிட்டாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு நம்பிக்கைகொள்ள முடியும்.  

சிறுவயது திருமணம் தடுக்கப்பட வேண்டும். அதில் தமிழ், முஸ்லிம், கண்டி சட்டம் என்ற எந்த மத  சம்பிரதாயங்களுக்கும் இடமிருக்கக் கூடாது. எவராயினும் அவர்கள் இலங்கையரே. அவர்கள் சிறுவர்களே 2017ஆம் ஆண்டில் 20வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் 2,225பேர் திருமணம் முடித்துள்ளனர். இவர்களது உடல் தகைமை தொடர்பில் மகளிர் விவகார அமைச்சு ஏன் கவனமெடுக்கக்கூடாது?  

4 வயதுக்கு மேல் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என கைநூல் ஒன்றை அச்சிட்டு அமைச்சு சகல பெற்றோர்களுக்கும் வழங்குவது அவசியம்.  

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பில சில ஊடகங்கள் மிக மோசமாக செயற்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் வியாபாரமாகக் கொண்டுள்ள சில ஊடகங்கள் மிக மோசமாக தகவல்களை வெளியிடுவதை காணமுடிகின்றது. இது தொடர்பில் சட்டங்கள் கொண்டுவரப்படுவது சிறந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    

(லோரன்ஸ் செல்வநாயகம்,  லக்ஷ்மி பரசுராமன்)  

Thu, 03/28/2019 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை